Wednesday, July 30, 2014

காணாமல் போனவர்கள் தொடர்பில் இதுவரையில் 700 முதல் 800 வரையிலான முறைப்பாடுகளே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது: மெக்ஸ்வெல் பரனகம!

Wednesday, July 30, 2014
இலங்கை::காணாமல் போனவர்கள் தொடர்பில் இதுவரையில் 19000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 700 முதல் 800 வரையிலான முறைப்பாடுகளே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரனகம தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளே பூர்த்தியாகியுள்ளதாகவும் விசாரணைகள் தெடார்பிலான கால வரையறைகளை உறுதியிட்டு குறிப்பிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

ஆணைக்குழுவின் தவணைக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் பூர்த்தியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசாரணைகளை பூர்த்தி செய்து அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இதுவரையில் ஐந்து அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு அமர்வின் போது குறைந்தபட்சம் 200 முறைப்பாடுகள் பதிவிற்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகளவான முறைப்பாடுகள் காணப்பட்டால் அந்தப் பகுதியில் பிரிதொரு தடவையும் விசாரணைகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாதகத் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் சரியான திசையில் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு  வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கப் படையினரிடம் சரணடைந்து அதன் பின்னர் காணாமல் போயிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடாத்த மற்றுமொரு விசாரணைக்குழு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிய சாட்சியங்களுடன் இவ்வாறான சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டால் அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பிற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்தி முடிக்க சில ஆண்டு காலம் அவசியமாகின்றது எனவும், இரண்டாம் உலக யுத்தம் குறித்த விசாரணைகள் இன்றும் தொடர்க்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் திடமான ஆதாரங்கள் கதிரட்டப்பட்டாலே குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒரு தொகுதியினர் வெளிநாடுகளில் கூட புகலிடம் பெற்றுக்கொண்டிருக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளிநாடுகளில் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் ஊடாக குறித்த நாடுகளிடமிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரணடைந்து அதன் பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பிலான பட்டியல் பூரணமாக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்துவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையானதே, அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அந்த அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதியே அறிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரையில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் பெரும்பான்மையானவை  புலிகளின் கடத்தல்கள் தொடர்பிலேயே பதிவாகியுள்ளது என மெக்ஸ்வெல் பரனகம தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment