Sunday, April 20, 2014

ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் தீர்ப்பு குறித்து நீதிபதி சதாசிவம் கூறியிருப்பது சர்ச்சைக்குரியது: கருணாநிதி!

Sunday, April 20, 2014
சென்னை::திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள  அறிக்கை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு  சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின்  தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக மற்றும்  தமிழகத்தில் உள்ள பல கட்சிகளும் கோரிக்கை வைத்து  வருவதும், 
அது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்த  போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், தமிழக  அரசு நடவடிக்கை எடுத்து அவர் களை விடுவிக்க முடியும் என்ற  கருத்தினைத் தெரிவித்தது. இதையொட்டி தமிழக அரசும் சட்ட  விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாமல், அவசர, அவசரமாக  மேற்கொண்ட நடவடிக்கையில், அதற்கு மத்திய அரசு, மூன்று  நாட்களுக்குள் ஒப்புதல் தர வேண்டும் என்று ஜெயலலிதா  கூறியிருந்தார்.

மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்காததோடு, தமிழக அரசுக்கு  அந்த அதிகாரம் இல்லை என்று, உச்ச நீதிமன்றத்தில் ஒரு  மனுவினை தாக்கல் செய்தது. அந்த வழக்கின் தீர்ப்பினைத்  தான், நேற்றைய தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  சதாசிவம், வரும் 25ம் தேதிக்குள், தீர்ப்பு வழங்கப்படும் என்று  கோவையில் நடைபெற்ற ஒரு விழாவில் வெளிப்படையாகத்  தெரிவித்தார். அந்த செய்தி அனைத்து பத்ரிகைகளிலும்  வெளிவந்துள்ளது. வரும் 24ம் தேதி அன்று  நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள  சூழ்நிலையில், நீதியரசர் சதாசிவம், தான் ஓய்வு பெறவுள்ள 25ம்  தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியா கும்  என்று கூறியிருப்பது,

அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்திலே ஏற்படுத்துமோ  என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளதோடு, வழக்கறிஞர்கள்  மத்தியில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
 
முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு, நாடாளுமன்ற பொதுத்  தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு வரும் என்று,  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே  அறிவித்திருப்பது எத்தகைய சாதக, பாதகங்களை ஏற்படுத்தக்  கூடும் என்பதையும், அந்த அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு  உகந்தது தானா என்பதையும் எண்ணிப் பார்த்து, அதற்கேற்ப  முடிவு செய்வது நீதிமன்ற நெறிகளைக் காப்பாற்றப் பயன்படும்  என்பதுடன் அனைவருக்கும் நலன் பயக்கும் என்றும் தெரிவித்துக்  கொள்கிறேன்.

No comments:

Post a Comment