Tuesday, April 15, 2014
மதுரை::நரேந்திரமோடி சந்தித்துக்கேட்டும் கூட பாரதிய
ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறுத்துவிட்டார்.
இதையடுத்து தமிழக பா.ஜ. கட்சியினர் ஏமாற்றத்துடனும் சோகத்துடனும் உள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் தனக்கென்று ஒரு முத்திரை
பதித்தவர். இவரை விட செல்வாக்கு குறைந்த நிலையிலும் தே.மு.தி.க.வை
தோற்றுவித்து அக்கட்சியை நடத்தி வருகிறார் விஜயகாந்த். ஆனால்
ரஜினிகாந்துக்கு அரசியலில் ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் இல்லை. கட்சிகளை,
பதவிகளை நான் விரும்பமாட்டேன் என்று ஒரு பாட்டில் அவரே கூறியிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலின்போது தி.மு.க., த.மா.கா. கூட்டணியை
ஆதரித்ததோடு ஒதுங்கிக்கொண்டார். அவரது ரசிகர்கள் அவரை அரசியலுக்கு
வருமாறு எவ்வளவோ வேண்டுகோள் விடுத்தும் அதை ஏற்கவில்லை ரஜினிகாந்த். தனது
தொழிலை மட்டும் கவனித்து வந்தார். ஒருமுறை பா.ஜ.க.வுக்கு வாக்களித்ததாக
அவர் பகிரங்கமாக தெரிவித்தார். அதிலிருந்து அவர் பா.ஜ.க. அபிமானி என்று
பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் தற்போது நடக்கும் தேர்தலில் எப்படியாவது ரஜினியின்
ஆதரவை பெற்றுவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.வினர் துடித்தார்கள். அதன்
எதிரொலியாகத்தான் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை ரஜினியின்
வீட்டுக்கே செல்லவைத்தனர். அவரும் கட்சியின் விருப்பப்படி ரஜினிகாந்தை
சந்தித்தார். ஆனால் அப்போது ரஜினி எந்த பிடியும் கொடுக்கவில்லை என்று
கூறப்படுகிறது. இருந்தாலும் வெளியே வந்த ரஜினி, மோடி ஒரு வலிமையான தலைவர்.
அவர் நினைப்பது நிறைவேற வாழ்த்துகிறேன் என்று கூறி முடித்துக்கொண்டார். ஆக
நரேந்திர மோடி நேரில் சந்தித்தப்பிறகும் ரஜினிகாந்த் எந்த ஒரு முடிவையும்
பகிரங்கமாக அறிவிக்கவில்லை. மோடிக்க தேனீர் கொடுத்ததாக சொல்லி
நழுவிக்கொண்டார் ரஜினி. எப்படியாவது இந்த தேர்தலில் ரஜினியின் ஆதரவை
பெற்றுவிடலாம் என்று தவியாய் தவித்த பா.ஜ.க.வினருக்கு மிஞ்சியது ஏமாற்றம்
மட்டுமே.
இதுஒருபுறம் இருக்க மோடி ரஜினியை சந்தித்தது விஜயகாந்த்துக்கு
பிடிக்கவில்லையாம். இந்த விஷயத்தில் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக
கூறப்படுகிறது. ரஜினி, மோடி சந்திப்பு பற்றி அவரிடம் யாரும் சொல்லவும்
இல்லையாம். அதனால்தான் மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தையே அவர்
புறக்கணித்தாராம். மேலும் மோடியின் சென்னை பொதுக்கூட்டத்தை வைகோ,ராமதாஸூம்
புறக்கணித்து இருப்பது மேலும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

No comments:
Post a Comment