Saturday, April 26, 2014
ஸ்ரீநகர்:காஷ்மீர்::மாநிலத்தில் நேற்று தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ராணுவ மேஜர், ஜவான் மற்றும் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டம் கரேவா மன்லு பகுதியில் 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைபிரிவினர் அந்த பகுதிக்கு விரைந்தனர்.
வீடு வீடாக தேடுதல் வேட்டை தொடங்கினர். அப்போது ஒரு வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி சுட்டனர். இரு தரப்பினருக்கும் அங்கு கடுமையான துப்பாக்கி சண்டை மூண்டது. ஒரு தீவிரவாதி ஜன்னல் வழியாக குதித்து தப்பிக்க முயன்றான். அவரை பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்றனர். நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரண்டாவது தீவிரவாதியும் கொல்லப்பட்டான். ராணுவத்தினர் வீசிய கையெறி வெடிகுண்டில் வீட்டின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் 3வது தீவிரவாதி சிக்கிக் கொண்டான்.
அவன் அசைவற்று கிடப்பதை கண்ட மேஜர் முகுந்த் வரதராஜன் அவன் அருகில் சென்றார். அப்போது டீரென அந்த தீவிரவாதி எழுந்து மேஜரை சுட்டுக் கொன்றான். அவருடன் இருந்த ஜவான் ஒருவரையும் தீவிரவாதி சுட்டுக் கொன்றான். இதற்குள் மற்ற வீரர்கள் சுதாரித்துக் கொண்டு தீவிரவாதியை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவ மேஜர் வரதராஜன் பெங்களூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment