Tuesday, April 22, 2014

இலங்கையில் நடைபெறவிருக்கும் உலக இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இதுவரை 103க்கும் அதிகமான நாடுகள் உறுதி செய்துள்ளன!

Tuesday, April 22, 2014
இலங்கை::இலங்கையில் நடைபெறவிருக்கும் உலக இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வருகைதருவதென இதுவரை 103க்கும் அதிகமான நாடுகள் உறுதி செய்துள்ளன. இதில் 40 நாடுகளின் அமைச்சர்களும் அரசியல் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

103 நாடுகளை பிரதிநிதித்துவ ப்படுத்தும் இளைஞர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதோடு, 350 ற்கும் அதிகமான இளைஞர்கள் பல்வேறுபட்ட சிவில் சமூக அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
அத்துடன் இம்முறை இலங்கையில் நடைபெறவிருக்கும் உலக இளைஞர்கள் மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைத் தலைவர் கலாநிதி ஜோன் வில்லியம் அஷேயும், அஹமட் அல்-ஹெண்டாவி உட்பட இன்னும் பல ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உலக இளைஞர் மாநாடு 2014 மே மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அதன் அங்குரார்ப்பண நிகழ்வு அம்பாந்தோட்டை, மாகம்புர ருஹுணு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
“2015 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் இளைஞர்களையும் உள்ளடக்குதல்” எனும் தொனிப்பொருளில் இம்முறை உலக இளைஞர் மாநாடு இடம்பெற உள்ளது.

இம்மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள 18 க்கும் 29 வயதுக்கும் உட்பட்ட 1500 பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். இவர்களில் 350 பேர் பின்தங்கிய பிரதேசங்களில் இருந்து வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டை உலகளாவிய ரீதியில் அதிகமான இளைஞர்கள் பங்குகொள்ளும் நிகழ்வாக நடாத்துவதே எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment