Monday, February 24, 2014
மதுரை::அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான
ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கட்சியினராலும்,
மக்களாலும் கோலாகல மாக கொண்டாடப்படுகிறது.
முன்னதாக இந்த பிறந்த நாள் விழாவை அதிமுக வினர் கடந்த சில நாட்களாகவே
கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டம் இன்று மேலும் வலுப்பெறும்.
முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக வினர் தமிழகம் முழுவதும்
உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். தங்கத் தேர் இழுக்கும்
நிகழ்ச்சிகளும் நேற்று நடைபெற்றன.
ஏழை _ எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ரத்ததான
நிகழ்ச்கிகளும் ஆங்காங்கே நடைபெற்றன. போக்கு வரத்துத் துறை அமைச்சர்
செந்தில் பாலாஜி, கிட்டத்தட்ட 53 ஆயிரம் பேருக்கு ரத்ததானம் வழங்கும்
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதை நடத்திக் காட்டி கின்னஸ் சாதனையே படைத்து
விட்டார். அவரை முதல்வர் நேரில் அழைத்து பாராட்டினார். இதற்கான சான்றிதழை
கின்னஸ் அமைப்பின் பிரதிநிதி முதல்வரிடம் சில தினங்களுக்கு முன்பு
வழங்கினார்.
முதல்வரின பிறந்த நாளை ஒட்டி, நேற்று சென்னை தரமணியில் மாநில அளவிலான
பேச்சு போட்டி நடைபெற்றது. அதிமுக அரசின் ஈராண்டு சாதனை பற்றி மாணவ,
மாணவிகள் பேசினார்கள். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டன.
சென்னையில் மருத்துவ முகாமை அவைத் தலைவர் மதுசூதனன் துவக்கி வைத்தார்.
3000 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மராத்தான் ஓட்டமும் நடைபெற்றது. இதில்
முதல் 10 இடத்தில் வந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வளர்மதி, மூர்த்தி, பாலகங்கா ஆகியோர் கலந்து
கொண்டனர்.
திருச்சியில் 108 பால் குட ஊர்வலம் நடைபெற்றது. அதன் முடிவில் வெக்காளி
அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அன்னதானமும் நடைபெற்றது. இந்த
நிகழ்ச்சியில் அமைச்சர் பூணாட்சி,அரசு கொறடா மனோகரன், பரஞ்சோதி எம்.எல். ஏ.
, திருச்சி மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரத்ததான நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ராமநாதபுரத்தில்
மகளிர் அணி சார்பில் வழிவிடு முருகன் கோவிலில்பூஜைகள் நடைபெற்றன. அதே போல
புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் வழிபாடு நடைபெற்றது. இதில்
அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவ
முகாமை முருகையா பாண்டியன் துவக்கி வைத்தார். முதல்வரின் பிறந்த நாளை
ஒட்டி, கும்பகோணத்தில் பாக்கியராஜ், சகாய ராஜ் ஆகியோர் ஒரு ரூபாய்க்கு டீ
,கேக்கும் சப்ளை செய்தனர். இந்த நிகழ்ச்சி அங்கு பெரும் வரவேற்பை பெற்றது.
மதுரையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தங்க
தேர் இழுத்தனர். இதே போல் வைகைச் செல்வன், முத்துராமலிங்கம் ஆகிய
எம்.எல்.ஏ.க்கள் மருத்துவ முகாம்களை நடத்தி நலத்திட்ட உதவிகளையும்
வழங்கினர். தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
இன்று அதிமுக தலைமைக் கழகத்தில் பிரமாண்ட கேக் வெட்டப்படுகிறது. இந்த
நிகழ்ச்சியில் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து
அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள். நாடு முழுவதும் இன்று முதல்வரின்
பிறந்த நாள் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டடி தலைவர்கள்
முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

No comments:
Post a Comment