Saturday, January 11, 2014
இலங்கை::இலங்கை தொடர்பிலான சர்வதேச விசாரணை தேவையென்ற
வலியுறுத்தலை கடுமையாக எதிர்க்கின்றேன். இது அவசியமற்றது
மட்டுமல்ல எமது நாட்டின் இறையாண்மையை மீறும் செயலாகும் என அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
எமக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கப்படுமானால் அது எமது பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எமக்கு மறைப்பதற்கு எதுவுமே இல்லை. எவரும் இங்கு வந்து அனைத்தையும்
பார்வையிடலாம். அதற்கான கதவுகள் திறந்தே உள்ளன என்பதே
ஜனாதிபதியின் கொள்கையாகும்.
அதற்கமையவே அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீபன் ராப்புக்கும்
அனுமதி வழங்கப்பட்டது. அவ்வாறு வந்தவர்கள் குற்றச்சாட்டுக்களை
சுமத்தலாம்.
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் எமக்கெதிராக அமெரிக்க
பிரேரணைகளை சமர்ப்பிக்கலாம். ஆனால், அதற்கு எம்மால் பதில்களை வழங்க
முடியும். அதற்குத் தயாராகவே இருக்கின்றோம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள்
நடைமுறைப்படுத்தப்படுகின்றதா உட்பட வேறு பல விடயங்களை
வெளிநாடுகளால் கண்காணிக்க முடியும்.
ஆனால், எங்கள் விடயங்களை சர்வதேச ரீதியில் விசாரணை செய்ய
முடியாது. அதற்கு இடமளிக்க முடியாது. சர்வதேச விசாரணை என்ற
பேச்சுக்கே இங்கு இடமில்லை. அதனைக் கடுமையாக எதிர்க்கின்றேன். இது
எமது நாட்டின் இறையாண்மையை மீறும் செயலாகும்.
ஐ.நா சபையால் பொருளாதாரத்தடை விதிக்க முடியாது. மாறாக அமெரிக்கா
உட்பட வேறு நாடுகள் தாம் நினைத்தால் பொருளாதாரத் தடைகள் விதிக்கலாம்.
அவ்வாறான தடைகள் விதிக்கப்படுமானால் எமது பொருளாதாரம் பாதிக்கும்.
யாழ்.மன்னார் ஆயர்களுக்கு அவர்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும்
உரிமையுண்டு. அதேவேளை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் உரிமை
எமக்கு உள்ளது என்று வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

No comments:
Post a Comment