Saturday, January 11, 2014

நல்ல எதிர்க்கட்சித் தலைவராக செயல்படாதவர் விஜயகாந்த்: சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்!

Saturday, January 11, 2014
வேலூர்::நல்ல எதிர்க்கட்சித் தலைவராக செய்லபட முன்வரதவர் தே.மு.க.தலைவர் விஜயகாந்த். அவர் அரசியலில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறினார். வேலூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இல்லை. மத்திய அரசு தமிழகத்துக்கு போதுமான நிதியை அளிப்பதில்லை. ஈழத்தில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இந்தியாவில் தமிழகம் இருக்கிறதா என்ற சந்தேகத்தை மத்திய அரசு ஏற்படுத்தும் வகையில் அதன் செயல்பாடு மீனவர் பிரச்சனையில் உள்ளது. அவர்கள் இந்திய மீனவர் பிரச்னை என்ற நோக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் 40 இடங்களையும் அ.தி.மு.க அணி கைப்பற்றும் நிலையில்தான் தமிழகத்தின் கருத்துகளுக்கு மத்திய அரசை செவிசாய்க்க வைக்க முடியும்.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி திருப்திகரமாக உள்ளது. அவர் பல சவால்களை சந்தித்து வருகிறார். மின்பற்றாக்குறை விஷயத்தில் கூட மத்திய அரசு சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கூடன்குளம் மின்சாரத்தில் 1000 மெகாவாட் மின்சார்த்தை தமிழகத்துக்கு அளிப்பதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்ற முன்வந்திருந்தால் கூட இப்பிரச்னைக்கு நல்ல முடிவு ஏற்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. ஜெயலலிதா நல்ல நிர்வாகத் திறமையுடன் மின்பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், விரைவில் மின்பற்றாக்குறை பிரச்னை தீர்வுக்கு வரும். சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி தர்மத்தைக் கடைபிடிக்கும் கட்சியாக செயல்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. பேனரை வைத்துதான் வெற்றி பெற்றுள்ளோம். அதனால் அவர்களுடன்தான் இணைந்து செயல்பட வேண்டும். என்னை பொருத்தவரை கூட்டணியை விட்டு வெளியேற வேண்டுமானால், அவர்கள் மூலம் பெற்ற பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

கூட்டணியில் இடம்பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர்களோடு இணைந்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என விரும்புகிறேன். மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. அணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு பாடுபடுவேன். கட்சிக்கு சீட் கேட்பீர்களா என்று கேட்கிறீர்கள். அதற்கான கோரிக்கை வரும்போது அதை அ.தி.மு.க தலைமையிடம் வைப்போம். ஆம் ஆத்மி கட்சி டெல்லில் வெற்றி பெற்றதற்கு காரணம் காங்கிரஸ், பா.ஜ.க.எதிர்ப்பா அல்லது ஆம் ஆத்மி கட்சியினர் செயல்பாடா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். எது எப்படி இருப்பினும் அக்கட்சியை மக்கள் உற்று பார்க்கிறார்கள். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெளிவான நிலைபாட்டை எடுக்க வேண்டும். மக்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். அதை அவர் செய்யவில்லை. நல்ல எதிர்க்கட்சியாக இருந்து செயல்படவும் அவர் முன்வரவில்லை என்றார் சரத்குமார்.
 

No comments:

Post a Comment