Wednesday,January,1st, 2014
சென்னை::வலிமையும், வளமும் மிக்க தமிழகத்தை படைத்திட அனைவரும்
ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்றும், இந்த புத்தாண்டு புதிய
நம்பிக்கையையும், எழுச்சியையும் மக்களுக்கு வழங்கும் ஆண்டாக மலரட்டும்
என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வருமாறு:-
புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும்
இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு
நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகத்திலுள்ள அனைத்து மக்களும் அமைதியான சூழலில் வளமான வாழ்வு
பெற்று முன்னேற்றம் காணவும், இங்கு வறுமையில் வாடி நிற்போர் எவருமில்லை
என்ற நிலை எய்தி, சமூகப் பொருளாதார நிலையில் தமிழ்நாடு இந்தியாவிற்கே
முன்மாதிரியாக விளங்கிட வேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்றிடவும் எனது
தலைமையிலான அரசு அயராது பாடுபட்டு வருகிறது.
மக்களின் நல்வாழ்விற்காக எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்படுத்தி
வரும் எண்ணற்ற நலத்திட்டங்களை அனைவரும் முறையாகப் பயன்படுத்தி, தங்கள்
வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்வதுடன், வலிமையும், வளமும் மிக்க
தமிழகத்தைப் படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று
இப்புத்தாண்டில் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு புதிய நம்பிக்கையையும்,
எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்
என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை
மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
ரூ.281 கோடிக்கு பொங்கல் பரிசு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிலோ
பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் அடங்கிய சிறப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னரே வழங்கப்படும் என்று
முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு 281 கோடி
ரூபாய் செலவு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:_
தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும் அளவுக்கு கொண்டாடப்படும் திருநாள் பொங்கல் திருநாள்.
விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க
முடியும் என்பதால், இந்த நாள் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும்
நாளாகவும், விவசாயிகள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும்
கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாள் அறுவடை திருநாள் என்றும்
அழைக்கப்படுவதால் தமிழர் கலாச்சாரத்தில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகக்
கருதப்படுகிறது.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல்
திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தின்
அடிப்படையிலும், வறட்சி நிலைமை, பயிர்கள் பாதிப்படைந்தது ஆகியவற்றைக்
கருத்தில் கொண்டும்; கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1
கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 ரூபாய் மதிப்புடைய 1 கிலோ
பச்சரிசி, 40 ரூபாய் மதிப்புடைய 1 கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய்
ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
இதே போன்று, வரும் 2014_ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு,
தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 1
கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் என சிறப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு முன்னரே வழங்கப்படும்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் அரசுக்கு 281
கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
என்னுடைய இந்த நடவடிக்கை அனைத்துத் தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை
பாரம்பரிய முறைப்படி சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழிவகுக்கும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment