Sunday, January 12, 2014

20–ந் தேதி தமிழக–இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை: நாராயணசாமி தகவல்!

Sunday, January 12, 2014
காரைக்கால்::பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரைக்காலுக்கு வருகை தந்த மத்திய மந்திரி நாராயணசாமி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

புதுச்சேரி மாநிலத்திற்கு கடந்த 2010-–11–ம் ஆண்டிற்கு ரூ.2,500 கோடியும், 2011-–12–ம் ஆண்டிற்கு ரூ.2,750 கோடியும், 2012–-13–ம் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரம் கோடியும் மத்திய அரசு நிதி ஒதுக்கியது. நடப்பு 2013-–14–ம் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரம் கோடி தேவை இல்லை, 2 ஆயிரம் கோடி ரூபாய் போதும் என்று புதுச்சேரி முதல்–அமைச்சர் ரங்கசாமி மத்திய திட்டக்குழுவிடம் கூறி ரூ.2 ஆயிரம் கோடி மட்டும் வாங்கி உள்ளார். 2011-–12–ம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,750 கோடியில் புதுச்சேரி அரசு ரூ.1,190 கோடி மட்டும் செலவு செய்துள்ளது.

அதாவது ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 சதவிதம் மட்டுமே செலவு செய்துள்ளது. மீதி நிதியை செலவு செய்யவில்லை. அதுபோன்று 2012–-13–ம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட 3 ஆயிரம் கோடியில் 1,210 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. 55 சதவித நிதி செலவு செய்யப்படவில்லை.
இதனால் புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் திட்டங்கள், புதுச்சேரி மாநில அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நமது மீனவர்கள் கடந்த 2-3 மாதங் ளாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்பு இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் 20 முறை நாம் மீட்டுத் தந்துள்ளோம். ஆனால் இப்பொழுது இலங்கை அரசு ஒரு கடினமான நிலையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் கொந்தளித்துள்ளார்கள். அவர்களது குடும்பத்தினர் வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையை போக்க வேண்டும் என்றும் மீனவ சமுதாயத் தலைவர்கள் பிரதமரையும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வருகிற 20–ந் தேதி தமிழக, காரைக்கால்,இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். அவரை சந்தித்து, இந்த பேச்சுவார்த்தைக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், ஒப்பந்தம் போட வேண்டும் என்றும், தமிழக-–காரைக்கால் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும், பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
      
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment