Monday, November 25, 2013

மூப்பனாரை போல் முடிவு எடுத்தால் தான் மரியாதை' : வாசனை "உசுப்பேத்திய' ஆதரவாளர்கள்!!

Monday, November 25, 2013
சென்னை::மூப்பனாரை போல், விரைவில் ஒரு முடிவு (மீண்டும் த.மா.கா.,வை துவங்குவது) எடுத்தால் தான், நமக்கு மரியாதை இருக்கும்' என, மத்திய அமைச்சர் வாசனை, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 
இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டிற்கு, பிரதமர் மன்மோகன்சிங் செல்லக் கூடாது' என, மத்திய கப்பல் துறை அமைச்சர், வாசன் தொடர்ந்து வற்புறுத்தினார்

ரகசிய கூட்டம்: இந்நிலையில், வாசனின் நேர்முக உதவியாளர் மகன், திருமண வரவேற்பு நிகழ்ச்சி, தஞ்சையில் நடந்தது. இதில், பங்கேற்க சென்ற காங்., எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் என, வாசனின் ஆதரவாளர்கள் அனைவருக்கும், முதல் நாள், ஒரு அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வாசனின் சொந்த ஊரான கபிஸ்தலத்தில், மாலை, 4:00 மணி முதல் 6:00 மணி வரை ஆலோசனை நடந்தது.ஆனால், காங்., தலைவர்கள் சிலர், வாசனுக்கு எதிராக இதை அரசியலாக்கினர். "வாசனால், காங்., தலைமைக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. அவர் கட்சி மேலிடத்திற்கு எதிராக செயல்படுகிறார்' என, கொளுத்திப் போட்டனர்.

இந்த ஆலோசனையில் பங்கேற்ற தலைவர்கள் சிலர், வாசனிடம் கூறியதாக வெளியாகியுள்ள தகவல்கள்:

தமிழகத்தில், உங்கள் தலைமையில் தான், அதிக ஆதரவாளர்கள் உள்ளனர். இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது' என, நீங்கள் வலியுறுத்தினீர்கள். ஆனால், ஞானதேசிகன், சுதர்சன நாச்சியப்பன் போன்றவர்கள், இதற்கு எதிராக பேசியது வேதனை அளிக்கிறது. மேலும், கட்சியில் உங்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை கெடுக்கும் வகையில், சிலர் தவறான தகவல்களை தலைமைக்கும், ராகுலுக்கும் தெரிவித்து வருகின்றனர். இதனால், லோக்சபா தேர்தலில், நம் ஆதரவாளர்களுக்கு கட்சித் தலைமை கொடுக்கும் முக்கியத்துவம் குறையும். அமைச்சர் பதவி முடிந்தவுடன், உங்களை கட்சி மேலிடம் புறக்கணிக்கலாம்.
 
தமிழக காங்., கட்சியில், "வாசன் ஆதரவாளர்கள்' என்ற தனித்தன்மையை இழந்து விடக்கூடாது. எனவே, மூப்பனாரை போல் நீங்களும், உடனடியாக ஒரு முடிவு எடுத்து, மீண்டும், தமிழ் மாநில காங்கிரசான த.மா.கா.,வுக்கு உயிர் கொடுங்கள். அதன் மூலம் தமிழகத்தில் காங்., கட்சியை காப்பாற்றுங்கள்.
இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு வாசன் பதில் அளிக்கையில், "நீங்கள் சொல்வது சாத்தியமா, அப்படி முடிவு எடுக்கும் பட்சத்தில் சரியா வருமா? இதுகுறித்து, இன்னும் ஆலோசிக்க வேண்டும்...,'' என்ற ரீதியில் கூறியுள்ளார்.

கூட்டத்தில், ஞானதேசிகனை தவிர, முக்கிய ஆதரவாளர்கள் அனைவரும் ஆஜராகியுள்ளனர்.

காங்., என்றாலே, கலகலப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. அது, வாசன் ஆதரவாளர்களால் நிகழ வாய்ப்பு உள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 

No comments:

Post a Comment