Friday, November 29, 2013

கல்முனை தனியார் பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த 2 கோடி ரூபா; கொரிய இணக்கம்

Friday, November 29, 2013
இலங்கை::கல்முனை நகரில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்தை சகல வசதிகளும் கொண்டதாக தவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு கொரிய நாட்டு கொய்கா நிறுவனம் உதவ முன்வந்துள்ளது.
 
இதற்காக கொய்கா திட்டத்தின் கீழ் இரண்டு கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு கொய்காவின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி பார்க் சூக் இணக்கம் தெரிவித்துள்ளார்.
 
ஆசிய மன்றத்தின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்படி அபிவிருத்தி திட்டத்திற்கு உதவுவதற்கான இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.
 
கொழும்பிலுள்ள கொரிய நாட்டு தூதரகத்தில் அமைந்துள்ள கொய்கா தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
 
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டு கல்முனை மாநகரப் பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் கொய்காவின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.
 
இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை சாதகமாகப் பரிசீலிப்பதாக உறுதியளித்த கொய்காவின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி, கல்முனை கல்முனை தனியார் பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு இந்த ஆண்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்தார்.
 
இதன் மூலம் பிரயாணிகளினதோ பஸ் நடத்துனர்களினதோ பயன்பாட்டுக்கு உதவாத ஒன்றாகக் காணப்படுகின்ற கல்முனை தனியார் பஸ் நிலையத்தை சகல வசதிகளும் கொண்டதாக அபிவிருத்தி செய்வதுடன் ஒற்றுமை சதுக்கம் எனும் பெயரில் வியாபார மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தி இரவு நேரத்திலும் கல்முனை நகரை இயங்கச் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment