Monday, October 28, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் அன்று தொடக்கம் தாய் நாட்டிற்கும் மக்களுக்கும் எதிராக துரோகம் செய்து வருகின்றனர்: தினேஷ் குணவர்தன!

Monday, October 28, 2013
இலங்கை::பொதுநலவாய உச்சி மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவிற்கு அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான தினேஷ் குணவர்தன இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது, அரசாங்கத்தின் கடும் அதிருப்தியை தெரிவித்ததுடன் உச்சி மாநாட்டிற்கான திகதி நெருங்கும் இச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு தவறானதெனவும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் அன்று தொடக்கம் தாய் நாட்டிற்கும் மக்களுக்கும் எதிராக செயற்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இலங்கையில் 53 நாடுகளின் அரச தலைவர்களுடன் மிகவும் கோலாகலமாக நடத்தப்பட ஏற்பாடாகி வரும் பொதுநலவாய உச்சி மாநாட்டினை இவர்கள் எதிர்ப்பதாக அறிவித்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனவும் அவர் கூறினார்.

யார் எத்தகைய தீர்மானங்களை எடுத்த போதிலும் மக்கள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமெனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
பொதுநலவாய மாநாட்டிற்கும் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

யுத்தத்திற்குப் பின்பு வடக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளும் பாரிய அபிவிருத்தியை கண்டு வருகிறது. இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுவதென்பது நாட்டிற்கும் மக்களுக்கும் அளப்பரிய பயன்களைப் பெற்றுத் தருமென்பதில் சந்தேகமில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதனை திட்டமிட்டு பகிஷ்கரிப்பது தாய்நாட்டிற்கும் அவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும் இழைக்கும் மிகப் பெரிய துரோகமாகு மெனவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

தற்போது எமது நாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து பொருளா தார ரீதியான உதவிகள் கிடைத்து வருகின்றன. இவற்றை நிறுத்தும் வகையிலேயே கூட்டமைப்பினர் செயற்பட்டு வருகின்றனர். இவர்களது செயற்பாட்டினால் வடக்கிலுள்ள மக்களின் முன்னேற்றமே தடைப்படப் போகிறது என்பதனை அறியாதவர்களாக இவர்கள் செயற்பட்டு வருகின்றனர். கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் தமிழ் தலைவர்களையே கொலைசெய்த தீவிரவாதிகளுக்கு சாதகமாக செயற்பட்டவர்கள். இவர்களது வரலாறு கறைபடிந்ததொரு அத்தியாயமாகும். புலம்பெயர் வாழ் தமிழர்கள் போடும் தாளத்திற்கெல்லாம் ஆடி பழகிய இவர்களால் சுயமாக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியவில்லை.

வடக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டதன் பின்னர் பாரிய அபிவிருத்திகள் கிடைத்து வரும் இந்நேரத்தில் கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்களுக்கு பாதகமாக அமையுமெனவும் அவர் தன் அதிருப்தியை தெரிவித்தார்.

No comments:

Post a Comment