Monday, October 28, 2013

மோடி கூட்டத்தில் 6 பேர் பலி: 4 தீவிரவாதிகள் சிக்கினர்!!

Monday, October 28, 2013
பாட்னா::பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட பாட்னா பொதுக் கூட்டத்தில் அடுத்தடுத்த 6 இடங்களில் குண்டு வெடித்தது. முன்னதாக பாட்னா ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த 8 குண்டு வெடிப்புகளில் சிக்கி 6 பேர் பலியானார்கள். 83 பேர் காயம் அடைந்தனர்.

நரேந்திர மோடியின் பேச்சை கேட்பதற்காக பாட்னா காந்தி மைதானத்தில் சுமார் 2 லட்ம் பேர் திரண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ரெயில்களில் வந்தனர். எனவே அதிகபட்ச உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ரெயில் நிலையம், பொதுக்கூட்ட உள்பகுதி, வெளிப்பகுதி ஆகிய 3 இடங்களில் குண்டுகளை வைத்திருந்தனர்.
தீவிரவாதிகளின் 10–க்கும் மேற்பட்டவர்களை கொண்ட குழு மிக, மிக திட்டமிட்டு இந்த நாச வேலையை நிகழ்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 2 குண்டுகள் வெடிக்காததாலும், பீதியில் நெரிசல் ஏற்படாததாலும் தீவிரவாதிகளின் ஆசை நிறைவேறவில்லை.

5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து குண்டு வெடித்துக் கொண்டே இருக்கும் வகையில் நாசவேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர்.
தீவிரவாதிகள் மொத்தம் 10 சக்தி வாய்ந்த குண்டுகளை பாட்னாவுக்குள் எடுத்து வந்திருந்தனர். அவர்களது திட்டப்படி காலை 9.30 மணிக்கு பாட்னா ரெயில் நிலையத்தில் முதல் குண்டு வெடித்தது. 9.30க்கு இரண்டாவது குண்டு வெடித்தது.

11.40க்கு உத்யோக் பவன் அருகே 3–வது குண்டும், 12.05 மணிக்கு ரீஜென்ட் சினிமா தியேட்டர் அருகே 4–வது குண்டும், 12.10 மணிக்கு காந்தி மைதானத்தின் உட்புறம் 5–வது குண்டும், 12.15 மணிக்கு டுவின் டவர்ஸ் அருகே 6–வது குண்டும், 12.20 மணிக்கு மைதானம் அருகில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அருகில் 7–வது குண்டும் 12.25 மணிக்கு மைதானம் அருகில் உள்ள குழந்தைகள் பூங்காவில் 8–வது குண்டும் வெடித்தன. 2 குண்டுகள் வெடிக்கவில்லை.

பாட்னா ரெயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்ததுமே போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதை ரெயில் நிலையத்தில் குண்டு வைத்த இம்தியாஸ் அன்சாரி என்ற தீவிரவாதி எதிர்பார்க்கவில்லை. போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஓடினான்.

அவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவன் சதி கும்பலில் ஒருவன் என்பது உறுதியானது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவன் கொடுத்த தகவலின் பேரில் அய்னூல், அக்தர், கலீம் என்ற மேலும் 3 தீவிரவாதிகள் போலீசாரிடம் பிடிபட்டனர்.
தீவிரவாதிகள் 4 பேரிடமும் பீகார் மாநில போலீசாரும், தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

பாட்னா குண்டு வெடிப்புக்கு திட்டமிட்டது யார்? குண்டுகள் எங்கு தயாரிக்கப்பட்டன? அவை எப்படி 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்த பாட்னா காந்தி மைதானத்துக்குள் எடுத்து வரப்பட்டன? குண்டுகளை வைத்தது மொத்தம் எத்தனை பேர்? இதற்கு தலைமை தாங்கி வழி நடத்தியது யார்? என்பன போன்ற கேள்விகளை 4 தீவிரவாதிகளிடமும் போலீசார் கேட்டனர்.
4 தீவிரவாதிகளில் அன்சாரி என்பவன் மட்டும் குற்றத்தை ஒப்புக் கொண்டு நாசவேலை திட்டத்தை முழுமையாக போலீசாரிடம் தெரிவித்தான். உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் நடந்த கலவரத்தில் முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கவே மோடி கூட்டத்தில் குண்டுகளை வெடிக்க செய்ததாக அவன் கூறினான்.

குண்டு வெடிப்புக்கு தலைமை தாங்கியவன் மற்றும் குண்டுகள் கொண்டு வந்து வைக்கப்பட்ட விதம் ஆகியவற்றையும் அன்சாரி தெரிவித்துள்ளான். ஆனால் அடுத்த கட்ட விசாரணை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக போலீசார் அந்த தகவல்களை தெரிவிக்கவில்லை.
10 குண்டுகளையும் பல இடங்களில் வைக்க 8 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்ததாக தெரிய வந்தது. அவர்களில் 4 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர். மற்ற 4 தீவிரவாதிகளைப் பிடிக்க பாட்னாவில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நாசவேலை செய்தது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் என்பது உறுதியாகி விட்டதால் பாட்னாவில் அவர்களுக்கு உதவி செய்தவர்களையும் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது. எனவே மேலும் பல சதிகாரர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment