Thursday, October 31, 2013

ஆபரேஷன் ஹம்லா’ தொடங்கியது 13 கடலோர மாவட்டங்களில் தீவிரவாதிகள் தேடுதல் ஒத்திகை போலீஸ் படைகள் குவிப்பு!

Thursday, October 31, 2013
சென்னை::தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ‘ஆபரேஷன் ஹம்லா’ என்ற பெயரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை ஒத்திகை இன்று காலை தொடங்கியது. பாகிஸ்தானில் இருந்து படகில் கடற்கரை வழியாக மும்பை வந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து, கடலோர பகுதிகளில் பாதுகாப்பை தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, 6 மாதங்களுக்கு ஒரு முறை ‘ஆபரேஷன் ஹம்லா’ என்ற பெயரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் திடீரென ஊடுருவினால் எப்படி அவர்களை வீழ்த்துவது என்று இந்த ஒத்திகை நடத்தப்படும். தமிழக கடலோர பகுதிகளில் 13 மாவட்டங்களில் ஹம்லா ஆபரேஷன் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டநெரிசல் அதிகமாக உள்ளதால் அதை சமாளிக்கும் பொருட்டு இங்கு இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கவில்லை. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்பாக்கம், கோவளம், திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர் முதல் பழவேற்காடு வரையும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஒத்திகை நடக்கிறது. குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் ஹம்லா ஆபரேஷன் சோதனை இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. சட்டம் ஒழுங்கு போலீசார்  மற்றும் கடலோர காவல் படை, கியூ பிரிவு மற்றும் உளவுபிரிவு போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொள்கிறார்கள்.

கடலோர பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், படகுகள் கண்காணிப்பு, கோயில்கள், ஓட்டல்கள், ரயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்டவற்றிலும் சோதனை நடந்தது. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இந்த சோதனை தொடங்கியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் எஸ்.பி. தர்மராஜன் உத்தரவின் பேரில் சுமார் 300 போலீசார், கடலோர காவல்படையினர், இந்திய கப்பல்படை ஆகியோர் கூட்டாக இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் எஸ்.பிக்கள் தலைமையில் சுமார் 750 போலீசார் இந்த ஆபரேஷனில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மீனவர்களையும், மீனவ கிராம மக்களையும்அழைத்து கடற்கரை, அல்லது கடலில் புதிய நபர்கள் தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். கடலில்  மர்ம பொருட்கள் மிதந்தால் அதுபற்றி போலீசுக்கு  தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
புதுவையில் 18க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் போலீசார் மப்டி உடைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வடக்கு காவல் சரகத்தில் எஸ்பி பிரதீப்குமார் திரிபாதி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ரங்கநாதன், வீரவல்லவன் தலைமையில் துப்பாக்கி போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு சந்தேக நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடலோரபடை போலீஸ் எஸ்பி வனிதா தலைமையில் கடலோரகாவல்படை, கடற்படை, மரைன் போலீசார், கியூ பிரிவு போலீசார் 300க்கும் மேற்பட்டோர் ஹம்லா ஒத்திகையில் ஈடுபட்டனர்.  கடலோர காவல்படை கமாண்டர் மோலே தலைமையில் ராமேஸ்வரம், சங்குமால், ஓலைக்குடா, பாம்பன், மண்டபம் வடக்கு, தெற்கு கடற்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மீனவர்களின் படகுகளை மறித்து சோதனை நடத்தினர். சந்தேக நபர்கள் இருந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர். இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை இரவு வரை நடைபெறும்.

வெடிகுண்டுகளுடன் 8 பேர் சிக்கினர்

ராமேஸ்வரம் கடலோர காவல்படை எஸ்ஐ கணேசன் தலைமையில் போலீசார், மீனவர்களின் விசைப்படகு மற்றும் நாட்டுபடகுகளை சோதனை செய்தனர். மண்டபம் வடக்கு கடல் பகுதியில் ஒரு நாட்டுப்படகில் வெடிகுண்டுகளுடன் 8 பேர் சிக்கினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஒத்திகைக்காக டம்மி வெடிகுண்டுகளுடன் பாதுகாப்பு படையினரே தீவிரவாதிகள் போல் வேடமிட்டு வந்தது தெரியவந்தது. அவர்கள் இந்திய கடலோர காவல்படை, இந்திய கடற்படை, கமோண்டோ படையை சேர்ந்தவர்கள் என தெரிந்ததும் போலீசார் நிம்மதியடைந்தனர். இதற்கிடையே, ராமேஸ்வரம் முழுவதும் 8 தீவிரவாதிகள் பிடிபட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment