Monday, September 30, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் செயற்படுகின்றது: உதய கம்மன்பில!

Monday, September 30, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் செயற்பட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுனரை நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை, அரசியல் சாசனத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ளது. மாகாண ஆளுனரை பணி நீக்குவதற்கு சில விதிமுறைகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
 
அரசியல் சாசனத்தை மீறியதாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவோ தெரிவித்து மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமே ஆளுனரை பணி நீக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. வட மாகாண ஆளுனர் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும், அரசியல் சாசனத்தை மீறவில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
ஓய்வு பெற்ற நீதவான் விக்னேஸ்வரன் மற்றும் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோரின் சட்ட அறிவாற்றல் குறித்து வெட்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் மெய்யான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டம் காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மக்களை தூண்டி அதன் மூலம் அரசியல் நடத்தவே விரும்புவதாகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கோ அவர்களுக்கு நலன்களை வழங்கவோ கூட்டமைப்பு நாட்டம் காட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை ஈழத்திற்கு அழைத்துச் செல்வார்கள் எனத் தமிழ்; மக்கள் கருதுவதாகவும் உண்மையில், கூட்டமைப்பு தமிழ் மக்ளை அழிவுப்பாதையில் இட்டுச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டது போன்றே பயங்கரவாத அரசியல் சக்திகளும் தடை செய்ப்பட வேண்டியது அவசியமானது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment