Thursday, September 12, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் மூன்று தசாப்த காலத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட மக்களை மீண்டும் அதற்குள் தள்ளிவிடும் வகையிலேயே அமைந்துள்ளது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Thursday, September 12, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் மூன்று தசாப்த காலத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட மக்களை மீண்டும் அதற்குள் தள்ளிவிடும் வகையிலேயே அமைந்துள்ளது. அது அபாயகரமானதாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளரை மேடையில் வைத்துகொண்டு பிரிவினைவாதம் பேசுவது ஆரோக்கியமானதொன்றல்ல என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களை அலரிமாளிகையில் இன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆசிரியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

வட மாகாண தேர்தலில் போட்டியிடுவதற்கு சமூக ஆர்வலர்கள்,கல்வியாளர்கள், முன்னாள் அரச உத்தியோகஸ்தர்கள் என்று பலர் இருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட முதலமைச்சர் வேட்பாளர் அங்குள்ள பிரச்சினைகளை எவ்வாறு இனங்காண போகின்றார். முதலமைச்சர் வேட்பாளரை மேடையில் வைத்துகொண்டு பிரிவினைவாதம் பேசுவது அவ்வளவு ஆரோகியமானதல்ல.

வடக்கில் பாதுகாப்பு படைகளை குறைக்குமாறு கூறிக்கொண்டிருக்கும் கூட்டமைப்பினர் படைகளின் பாதுகாப்பிலேயே தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனநாயகத்தையும் சமூகத்தையும் குழிக்குள் தள்ளிவிடக்கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திர மற்றும் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக்கியிருக்கலாம். கூட்டமைப்பினர் அன்று புலிகளின் பேச்சை கேட்டே செயற்பட்டனர். இன்று அவ்வாறான நிலைமையில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment