Monday, September 16, 2013
இலங்கை::எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தீவிர தேர்தல் பிரச்சாரப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றார்.
வடக்கு மக்கள் இத்தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சாரங்களை நம்பி வடக்கு மக்கள் ஏமாறக்கூடாது என்று இன்று யாழ் சுற்றுலா விடுதியில் நடைபெற்ற சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகளுக்கு மத்தியில் உரையாற்றும் போது கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் வெற்றிவாய்ப்புக்கள் தொடர்பாக கேட்டறிந்து அவர்களின் தேர்தல் பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டு வருவதுடன் அமையவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் ஆட்சியமைக்க வேண்டும் அப்போதுதான் அபிவிருத்திப் பணிகளை வடக்கு மக்கள் அனுபவிக்க முடியும் என்ற அடிப்படையில் தமது பிரச்சாரப் பணிகளை கிழக்கு முதலமைச்சர் மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வடக்கு மக்கள் தங்களது உரிமைகளை அனுபவிப்பதில் பயங்கரவாதம் தடையாக இருந்ததோடு அவர்களின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு தடையாக இருந்தது. இந்நிலை தற்போது நீக்கப்பட்டு மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளை அனுபவிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.இதன் ஆரம்பமாக வடக்கு மாகாண சபை தேர்தல் அமையவுள்ளது.
இவ்வாறு வடக்கில் உள்ள சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரச்சாரங்களில் கலந்து கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக தீவிரப் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

No comments:
Post a Comment