Thursday, September 5, 2013

சிரியா மீதான ராணுவ நடவடிக்கை தற்காலிக ஒத்திவைப்பு!

Thursday, September 05, 2013
வாஷிங்டன்::சிரியா மீதான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ஒaப்புதல் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தை அந்நாட்டின் வெளிநாட்டு உறவுகளுக்கான எம்.பி.க்கள் குழு திருத்தியுள்ளது. இதனால் சிரியா மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
ரசாயன ஆயுதங்கள் மூலம் அப்பாவி
குழந்தைகள், பெண்களை சிரியா படுகொலை செய்தது என்று அமெரிக்கா கூறி வருகிறது. இதனால் சிரியா மீது ராணுவ நடவடிக்கைக்கும் அமெரிக்கா தயாராகி வருகிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகளான இஸ்ரேலும் பிரான்ஸும் இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
 
இந்நிலையில் சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சிரியா மீது முழு அளவிலான போர் நடவடிக்கையை வலியுறுத்தும் விதமாக இந்த தீர்மானம் இருக்கிறது என்று சில எம்.பி.க்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது அந்த தீர்மானத்தை அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகளுக்கான எம்.பி.க்கள் குழு மாற்றியுள்ளது. அதாவது சிரியா மீதான ராணுவ தாக்குதலுக்கான காலக்கெடுவை 60 நாட்களாக்கியிருக்கிறது. சிரியாவில் உடனடியாக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளாது என்றும் அதில் திருத்தப்பட்டிருக்கிறது. 
 
இதனிடையே சிரியா மீதான மேற்கத்திய நாடுகளின் ராணுவ தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்பதற்கான ஆதாரம் இருந்தால் அதை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் முன்புதான் தாக்கல் செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு வதந்தந்திகளின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார். அப்படி ஒரு ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் ஒப்புதல் அவசியமானது என்றும் புதின் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment