Wednesday, September 11, 2013

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை? : நாளை மறுநாள் தீர்ப்பு!

Wednesday, September 11, 2013
புதுடெல்லி::டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டுமென விரைவு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் வாதிட்டார். தண்டனை விவரத்தை நீதிபதி நாளை மறுநாள் அறிவிக்கிறார். டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என டெல்லி விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
 
இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி யோகேஷ் கன்னா அறிவித்திருந்தார். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறையிலிருந்து வேனில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
 
கோர்ட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்களும் குவிந்திருந்தனர். குற்றவாளிகள் 4 பேரும் வேனிலிருந்து இறக்கப்பட்டு கோர்ட் அறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது பத்திரிகையாளர்களை பார்த்து, ‘நாங்கள் நிரபராதிகள்’ என குற்றவாளிகள் கோஷமிட்டனர்.
 
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காலை 11 மணிக்கு விரைவு நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பது தொடர்பான விசாரணை தொடங்கியது. அரசு தரப்பில் அரசு சிறப்பு வக்கீல் தயான் கிருஷ்ணா ஆஜராகி, ‘மிகக் கடுமையான குற்றம் புரிந்ததால், குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும்’ என வாதிட்டார். இவரை தொடர்ந்து குற்றவாளிகள் சார்பாக அவர்களது வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். குற்றவாளிகளுக்கு கருணை காட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
 
இதுபோன்ற வழக்குகளில் அதிகபட்சமாக ஆயுள்தண்டனைதான் வழங்க வேண்டும் எனவும், அபூர்வமான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். பிற்பகல் வரை வாதம் நீடித்தது. வாதங்கள் முடிந்ததை தொடர்ந்து குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை நாளை மறுநாள் மதியம் 2.30 மணிக்கு அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment