Sunday, September 8, 2013

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையின் 24 ஆவது அமர்வுகள் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார் நவிபிள்ளை!

Sunday, September 08, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வுகள் நாளை 9 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில், அதன் ஆணையாளர் நவிபிள்ளை பேரவையின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் தொடர்பில் விவாதத்துக்கான வருடாந்த அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.
 
அவரது உரையின் போது இலங்கை தொடர்பிலும் பிரஸ்தாபிக்கவுள்ளார் என தெரிய வருகிறது. இலங்கைக்கான தனது ஒரு வார கால விஜயத்தின் போது கண்டறியப்பட்ட சில விடயங்களையே அவர் தனது உரையில் சுட்டிக் காட்டவுள்ளார்.
 
இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான தேசியமட்ட விசாரணை ஒன்றினை இலங்கை அரசு முன்னெடுக்காவிடில் சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்களின் தேவை தொடர்பில் அவர் தனது உரையில் வலியுறுத்துவார் என தெரிய வருகிறது.
 
இது இவ்வாறிருக்க, அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த செய்திருந்த ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையர் நவபிள்ளையின் விஜயத்தின் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், தனது இலங்கை விஜயத்தின்போது கண்டறியப்பட்ட யதார்த்த நிலைமைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சில அமைப்புகளுடனான சந்திப்புகள், அவர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள், முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்ற பிரதான அம்சங்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்றினை அவர் தயாரிக்கவுள்ளார் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இலங்கையின் மனித உரிமை, நிலைவரம், ஜனநாயகத்துக்குச் சவாலான விடயங்கள், காணாமல் போனார் நிலைமைகள், கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகள் அமுலாக்கலின் தொய்வு நிலைமை, உட்படலான மேலும் சில உபதலைப்புகளின் கீழ் இந்த அறிக்கையைத் தயாரிக்கவுள்ளார் என்றும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இது இவ்வாறிருக்க, இந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் அமைச்சர் மட்டக் பிரதிநிதிகள் குழு பங்கேற்காது என்றும் ஐ.நாவின் ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவும் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுமே கலந்து கொள்வர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment