Wednesday, September 25, 2013
சென்னைவிமான நிலைய ரேடார் கட்டுப்பாட்டு அறையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான கருவிகள் எரிந்து சேதமானது.
சென்னை விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் வந்து இறங்குவதற்கான 2&வது ஓடுபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே துணை ஓடுபாதையாக இருந்தது, 3400 மீட்டர் நீளத்தில் 2&வது பிரதான ஓடுபாதையாக மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த பணி முடிவடையும் நிலையில் உள்ளது. நவம்பர் அல்லது டிசம்பரில் இருந்து இந்த ஓடுபாதை செயல்பாட்டுக்கு வர உள்ளது. இங்கு வந்து செல்லும் விமானங்களை கண்காணித்து இயக்குவதற்காக மற்றொரு புதிய ரேடார் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரேடாருக்கு கீழ் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் சக்தி வாய்ந்த 50 பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரேடாரின் இயக்கத்துக்கான மின்சாரம் இந்த பேட்டரி மூலம் வினியோகிக்கப்படும்.இந்நிலையில், நேற்று நள்ளிரவு ரேடார் கட்டுப்பாட்டு அறையில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பேட்டரிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த அறையின் கண்ணாடி ஜன்னல்கள், அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் உடைந்து நொறுங்கின. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான நிலையத்தில் உள்ள 3 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்தனர். கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் மின் இணைப்பை முதலில் துண்டித்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.தகவல் அறிந்து விமான நிலைய உயரதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கட்டுப்பாட்டு அறையில் இருந்த 50 பேட்டரிகளில் 45&க்கும்
மேற்பட்ட பேட்டரிகள் தீயில் வெடித்து சிதறி கருகி கிடந்தது தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த தொழில்நுட்ப கருவிகளும் சேதமானது. சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் அங்கு ஊழியர்கள் இல்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. தீ விபத்து பற்றி விசாரணை நடத்த டெல்லியில் இருந்து உயரதிகாரிகள் இன்று அல்லது நாளை சென்னை வரலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவத்தால் விமான போக்குவரத்தில் பாதிப்பு இல்லை. முதல் ஓடுபாதையில் வழக்கம்போல விமான போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. 6 மாதங்களுக்கு முன்பு நள்ளிரவில் விமான கட்டுப்பாட்டு கோபுரத்தில் இதுபோன்று மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது. சமீபத்தில் விமான நிலைய மேற்கூரை இடிந்தது. தற்போது ரேடார் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து நடந்துள்ளது. தொடர் சம்பவங்களால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


No comments:
Post a Comment