Thursday, September 19, 2013

தேர்தல் சட்டங்களை மீறிய 135 பேர் இதுவரை கைது!

Thursday, September 19, 2013
இலங்கை::தேர்தல் சட்டங்களை மீறிய 135 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் 174 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய மாகாணத்திலேயே கூடுதலான முறைபாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
பொலிஸ் தேர்தல் நடவடிக்கைப் பிரிவிற்கு மத்திய மாகாணத்தில் இருந்து 75 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
அத்துடன் வட மாகாணத்தில் 58 முறைபாடுகளும், வடமேல் மாகாணத்தில் 41 முறைபாடுகளும் பதிவாகியுள்ளன.
மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளன.
 
நள்ளிரவின் பின்னர் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்படுவதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது..
 
இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெறுவதற்கு முற்பட்டதாக கூறப்படும் இருவர்  கைது!
 
இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெறுவதற்கு முற்பட்டதாக கூறப்படும் இருவர் கஹதுடுவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து, சம்பந்தப்பட்ட இளைஞனுக்கு ஒருவகை போதையூட்டக்கூடிய பொருளை உண்ணக் கொடுத்து, கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார்.
 
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள விடுதியொன்றிற்கு இளைஞன் வருகை தந்துள்ளார்.
அங்கிருந்து வெளிநாடு அனுப்பிவைப்பதாக கூறி மற்றுமொருவர் அவரை கல்கிஸ்ஸ பகுதியிலுள்ள உணவகமொன்றிற்கு அழைத்துச் சென்றமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து போதையூட்டக்கூடிய ஒருவகை பொருளை உண்ணக்கொடுத்து அவரை கஹதுடுவை பகுதியிலுள்ள வீடொன்றிற்கு கடத்திச் சென்று கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக கிடைத்த தகவலுக்கமைய கஹதுடுவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், குறிப்பிட்ட வீட்டை சுற்றிவளைத்து சோதனை நடத்தியதுடன், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனையும் பொலிஸார் நேற்று காப்பாற்றியுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சந்தேகநபர்கள் இளைஞனின் பெற்றோருடன் தொடர்பினை ஏற்படுத்தி, அவரை விடுவிப்பதற்காக இருபது இலட்சம் ரூபா கப்பம் கோரி
யுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
 
கப்பமாக கோரப்பட்டிருந்த தொகையில் இரண்டு இலட்சம் ரூபா ஏற்கனவே வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
 
சுமார் இரண்டு கோடி காசோலை மோசடி தொடர்பில் இருவர் கைது!
 
சுமார் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாக கூறப்படும் இருவர் அநுராதபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த சந்தேகநபர்கள் காசோலைகள் மூலம் பணமோசடியில் ஈடுபட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் அநுராதபுரம் பகுதியில் மருந்தகம் ஒன்றை நடத்திச் செல்கின்றமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
 
இந்த சந்தேகநபர்கள் மருந்துக் கொள்வனவில் ஈடுபட்டிருப்பதுடன், அதற்கான பணத்தை செலுத்தாமல் இருந்துவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்..

No comments:

Post a Comment