Saturday, August 31, 2013

தமது தூதுக்குழுவுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: நவி பிள்ளை!

Saturday, August 31, 2013
இலங்கை::இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல்போனவர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்களையும் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் கொழும்பில் நேற்று மாலை சந்தித்தார். இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக விரைவில் தூதுக்குழுவொன்றை அனுப்புவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை உறுதியளித்துள்ளதாக காணாமல்போனோரை தேடியறியும் குழுவினர் கூறுகின்றனர்.

தமது தூதுக்குழுவுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கேட்டுக்கொண்டதாக நவிபிள்ளை கூறியதாகவும் காணமல்போனோரை தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் கூறினார்.

தமது உறவுகள் திரும்பிவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஐநா மனித உரிமைகள் ஆணையரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியை சந்தித்தபோது, இலங்கையில் பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்படும் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்று தான் கேட்டுக்கொண்டதாக நவி பிள்ளை காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, நவி பிள்ளையுடனான சந்திப்பின் முடிவில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கொழும்பில் சுதந்திர சதுக்க வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்பு பேரணியொன்றையும் நடத்தியிருந்தார்கள்.

இதற்கிடையே நேற்று பகல், யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல்போன இராணுவத்தினரின் உறவினர்களின் சங்கத்தினரும் கொழும்பு சுதந்திர சதுக்கத்திலிருந்து பேரணியாகச் சென்று ஐநா தலைமையகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

 புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பிலும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் விசாரணை நடத்த வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வெளிநாடுகளில் வாழும்  புலித் தலைவர்களிடம் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல்போன இராணுவத்தினரின் உறவினர்களின் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.

போர்க்காலத்தில் காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்காக இலங்கை அரசு நியமித்திருக்கும் ஆணையம் குறித்தும் அவர் பாராட்டியதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.         

No comments:

Post a Comment