Thursday, June 27, 2013

இலங்கையில் இனவாதம் தோன்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் தான் காரணம்: அமைச்சர் அதாவுல்லா!

Thursday, June 27, 2013
இலங்கை::இலங்கையில் இனவாதம் தோன்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் தான் காரணம் என்று  அமைச்சர் அதாவுல்லா தெரிவித்துள்ளார்.
 
நேற்று முன்தினம் பொத்துவிலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் அதாவுல்லா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் அதாவுல்லா,
பொதுபல சேனாவின் செயற்பாடுகள் குறித்து நாங்கள் ஜனாதிபதியிடம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது இந்த நாட்டில் இனவாதம் தோன்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். அதன் காரணமாகவே பொதுபல சேனா போன்ற அமைப்புகளை கட்டுப்படுத்த முடியாதிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
 
இது மட்டுமல்ல, ஏதாவது ஒரு பிரச்சினை வந்து பேச முற்பட்டால் ஜனாதிபதியும், சிங்கள மக்களும் சொல்கின்றார்கள், இனவாதம் தோன்ற நீங்கள் தான் காரணம். நீங்கள் பேசக் கூடாது என்று. இதற்குக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் முன்னெடுக்கும் அரசியல்தான்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்கு மாகாண சபை அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும், முஸ்லிம் காங்கிரசுக்கு முஸ்லிம்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பது தான் நோக்கம். அதற்காக அவர்கள் இப்போது கையில் எடுத்துள்ள பிரச்சினைதான் 13வது திருத்தச் சட்டம். இந்த திருத்தச் சட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.
 
ஆனால் மாகாணங்கள் ஒன்றிணைம் சரத்து ஒன்று அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் போது அதனை சிங்கள மக்கள் எதிர்ப்பார்கள். அதிலும் விரைவில் வடமாகாண சபைக்கு தேர்தல் வரப்போகும் நிலையில் நாம் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 
எந்தவொரு பிரச்சினையின் போதும் சர்வதேசத்திடம் கத்திக் கூப்பாடு போடுவதாலோ, முஸ்லிம் காங்கிரசைப் போன்று மேடை போட்டு அரசை கடுமையாக விமர்சிப்பதாலோ அவற்றுக்கு தீர்வு கண்டுவிடமுடியாது.
அதற்குப் பதிலாக பதவியில் இருக்கும் அரசுடன் சிநேகபூர்வமாகப் பேசியே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அதாவுல்லா  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment