Tuesday, June 18, 2013

இலங்கை ராணுவத்தினர் பயிற்சிக்கு எதிர்ப்பு: முற்றுகை போராட்ட அறிவிப்பால் வெலிங்டனில் ராணுவம் குவிப்பு

Tuesday, June 18, 2013
குன்னூர்::நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் ராணுவ முகாம் மற்றும் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு கடந்த 27-ந்தேதி முதல் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகிய 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமும் எழுதினார். வெலிங்டன் ராணுவ முகாமில் இருந்து இலங்கை அதிகாரிகளை உடனே வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி ம.தி.மு.க., விடுதலைசிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் வெலிங்டன் ராணுவ முகாம் நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இன்று (18-ந் தேதி) மீண்டும் வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று அரசியல் கட்சியினரும், தமிழ் அமைப்பினரும் அறிவித்தனர். அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வெலிங்டன் ராணுவமுகாமை முற்றுகையிட உள்ளனர்.

இதனால் ராணுவ முகாம் எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவ முகாமுக்கு முன்பாக தடுப்பு வேலிகள், கயிறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் ராணுவ முகாம் வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீஸ் துணை சூப்பிரண்டு மாடசாமி மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையும் நடைபெறுகிறது. லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

குன்னூர் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். குன்னூர் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment