Monday, June 10, 2013

இலங்கை ராணுவ அதிகாரிகள் பயிற்சிக்கு எதிர்ப்பு: போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த போலீஸ் குவிப்பு!

Monday, June 10, 2013
குன்னூர்::நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் இலங்கை ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலிலதா கண்டனம் தெரிவித்தார். அவர்களை உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

வெலிங்டன் ராணுவ முகாமில் இலங்கை ராணு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து ராணுவ கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று மாலை அங்கு சென்றனர்.

அவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென்று குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்ட மலை ரெயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து மற்றவர்கள் குன்னூர் லெவல்கிராசிங், ஊட்டி மெயின்ரோட்டில் இருந்து ராணுவ முகாமுக்கு பிரியும் பிளாக் பிரிட்ஜ், பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 220 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டக்காரர்கள் ராணுவ முகாமுக்குள் நுழைவதை தடுக்க ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. இன்றும் போராட்டக்காரர்கள் ராணுவ முகாமுக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

எனவே போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்துவதற்காக குன்னூர் சோதனைச் சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் மற்ற வழிகளான பேரக்ஸ், ஜிம்கானா சாலைகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி பகுதியில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment