Wednesday, June 12, 2013

நிபந்தனைகளை மீறிய, பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் இருந்து 644 மில்லியன் ரூபாவை அரசாங்கம் அறவிட வேண்டும்: கணக்காய்வாளர் திணைக்களம்!

Wednesday,June 12, 2013
இலங்கை::மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று, கட்டணங்களை செலுத்துவதற்கான நிபந்தனைகளை மீறிய, பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் இருந்து 644 மில்லியன் ரூபாவை அரசாங்கம் அறவிட வேண்டுமென கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவிக்கின்றது.
 
கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்காக 718 விரிவுரையாளர்களிடம் இருந்து நிதி அறவிடப்பட வேண்டியுள்ளதாக கணக்காய்வாளர் எச்.எ.எஸ் சமரவீர சுட்டிக்காட்டுகின்றார்.
 
2010 ஆம் ஆண்டு 7 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 308 விரிவுரையாளர்கள் நிபந்தனைக்கு அமைய, நிதி செலுத்தவில்லை என கணக்காய்வாளர் கூறினார்.
 
அவர்களிடமிருந்து 265 மில்லியன் ரூபா அறவிடப்பட வேண்டியுள்ளதுடன், இந்த நிலை 2011 ஆம் ஆண்டு மேலும் மோசமடைந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
2011 ஆம் ஆண்டு 10 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 410 விரிவுரையாளர்களிடம் இருந்து 379 மில்லியன் ரூபாவை அறவிட வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு நடவடிக்கைகளுக்கு அமைய, இந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், எனினும் நிதி அறிவிடும் நடவடிக்கை முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் கணக்காய்வாளர் எச்.எ.எஸ் சமரவீர குறிப்பிடுகின்றார்.
 
2012 ஆம் ஆண்டில் மேலதிக கல்விக்காக வெளிநாடு சென்றவர்களது தகவல்கள் தற்போது பெறப்பட்டு வருவதாகவும் கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவிக்கின்றது.
 
மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் விரிவுரையாளர்கள் கட்டணங்களை செலுத்துவதற்கான நிபந்தனைகளுக்கு அமைய, நாட்டிற்கு திரும்பி சிறிதுகாலம் சேவையாற்ற வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment