Sunday, June 16, 2013

வேலூர் ஜெயிலில் 300 போலீசார் அதிரடி சோதனை: செல்போன்- பணம் பறிமுதல்!

Sunday, June 16, 2013
வேலூர்::வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை கைதிகளான புலிகளின் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோர் இங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல முக்கிய வழக்கில் உள்ள விசாரணை கைதிகளும் கூலிப்படை கும்பலை சேர்ந்தவர்களும் இங்கு அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 20-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து ஜெயிலில் செல்போன், புழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி சிறையில் செல்போன்கள் கண்டெடுக்கும் சம்பவங்கள் நடந்து வந்தது. மேலும் கஞ்சா, புகையிலை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கமும் அதிகளவில் இருந்தது. பல கொலை சம்பவங்களுக்கு வேலூர் சிறையில் திட்டம் தீட்டபட்டு செல்போன் மூலம் வெளியே உள்ள கூலி படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொலை திட்டங்கள் அரங்கேறி வந்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து வேலூர் சிறையில் அதிரடி சோதனை நடத்த வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணப்பன் தலைமையில் ரகசிய ஆலோசனை நடந்தது. இன்று காலை 5.00 மணிக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் 3 டி.எஸ்.பி.க்கள் 200 அதிரடி போலீசார் 100 சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட போலீசார் சிறைக்குள் புகுந்தனர். அங்கு 4 பிரிவாக போலீசார் பிரிக்கப்பட்டு சிறை காவலர்கள் உதவியுடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கைதிகளின் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினர். மேலும் ஜெயில் வளாகம், மரப்பொந்துகள், குளியல் அறை, கழிப்பறைகளிலும் சல்லடை போட்டனர். 3 மணி நேரம் சோதனை நடந்தது. காலை 8 மணிக்கு சோதனையை முடித்துவிட்டு போலீசார் வெளியே வந்தனர். சோதனையில் ஏராளமான செல்போன்களும், தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

சோதனை குறித்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறியதாவது:-

இது வழக்கமான சோதனை சில பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். முழுமையான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றார். போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் சிறை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment