Tuesday, June 4, 2013

13 ஆவது திருத்தச்சட்டம் ஒரு நொண்டி எலியைப் போன்றது. இதை வைத்து அரசியல் பூனைகள் விளையாட்டு நடத்துகின்றன: அமைச்சர் பசீர் சேகுதாவூத்!

Tuesday, June 04, 2013
இலங்கை::13 ஆவது திருத்தச்சட்டம் ஒரு நொண்டி எலியைப் போன்றது. இதை வைத்து அரசியல் பூனைகள் விளையாட்டு நடத்துகின்றன' என உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தேசிய இளைஞர் தின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பசீர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'13வது திருத்தம் என்பது எலி, பூனை விளையாட்டு போன்றது. எலியை வைத்து பூனை விளையாடும் ஆனால் அதை கடித்து சாப்பிடுவதில்லை. அதேபோன்றுதான் இந்த 13ஆவது திருத்தமுமாகும். இந்த 13ஆவது திருத்தம் எனும் எலியை வைத்து அரசியல் பூனைகள் விளையாடுகின்றன.

இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இருந்தது. அதில் வெளிநாட்டு தலையீடுகள் ஏற்பட்டன. உள்நாட்டு யுத்தம் இருந்தது. இதன்மூலம் பெரும் அழிவுகள் ஏற்பட்டன என்பதற்கான ஆதாரமே இந்த 13ஆவது திருத்தமாகும்.
13ஆவது திருத்தம் ஏற்படுவதற்கு முன்னர் இனப்பிரச்சினை தொடர்பில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட போதிலும் பல விடயங்கள் இடம்பெற்ற போதிலும் அவைகள் எதுவும் சான்றாக அமையவில்லை. ஆனால் இந்த 13ஆவது திருத்தம் மாத்திரம் ஒரு சான்றாக உள்ளது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டதன் மூலம் இந்த 13ஆவது திருத்தம் வந்தது. ஆனால் இதை யாரும் அன்று ஏற்கவில்லை. புலிகளின் தலைவர் பிரபாகரனும்; ஏற்கவில்லை. அதேபோன்று அன்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கவும் ஏற்கவில்லை. அன்றைய மாகாண சபை தேர்தலை கூட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்க பகிஷ்கரித்திருந்தார்.
பெருந்தேசியவாத கட்சியான ஜே.வி.பி. அன்று எதிர்த்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்த்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இந்த சட்ட மூலம் முஸ்லிம்களின் முதுகின் மேல் எழுதப்பட்ட அடிமைச்சாசனம் எனக் கூறி இதை எதிர்த்தார்.

சில தமிழ் இயக்கங்களும் அன்று எதிர்த்தன. தவிர்க்க முடியாமல் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்ஜயவர்த்தன அதை ஏற்றுக்கொண்ட போதிலும்; ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தேசிய காணி ஆணைக் குழுவை அமுல்படுத்தவுமில்லை. எந்த ஒரு
அதிகாரத்தையும் வழங்கவுமில்லை. அதற்கான நடவடிக்கை எடுக்கவுமில்லை.

ஆனால் இன்று அந்த 13ஆவது திருத்தத்தை எதிர்த்த யாரும் உயிருடன் இல்லை. எனினும் இன்றும் அந்த 13வது திருத்தமிருக்கின்றது.
பல்லாயிரக்கணக்கான பெறுமதியான உயிர்களையும், பல கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களையும் இலட்சக்கணக்கானோரின் உடமைகளையும் இழந்தது வடமாகாண சபை தேர்தலில் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி பெற்றுக் கொடு;ப்பதற்கும் இன்னும் சிலருக்கு மாகாண சபை உறுப்பினர் பதவிகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் தானா? என கேள்வி கேட்க விரும்புகின்றேன்" என்றார்.

No comments:

Post a Comment