Wednesday, May 1, 2013

வடக்கில் பெறப்படும் காணிகளுக்கு மதிப்புத் தொகை வழங்கப்படும்: யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க!

Wednesday, May 01, 2013
இலங்கை::வடக்கில் பெற்றுக் கொள்ளப்படும் காணிகளுக்கு உரிய மதிப்புத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்குவோம். பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த அப்பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

உண்மைக்கு முரணான பிரசாரங்களை பரப்பி வடக்கில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்த ஆர்ப்பாட்டங்களில் வெறும் 50இற்கும் குறைவானவர்களே பங்குபற்றுகின்றனர்.
எவ்வாறாயினும் இந்தப் போராட்டங்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கையின் வட பகுதியில் துரித அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக பலாலி விமான நிலையத்தை சர்வதேச ரீதியில் தரம் உயர்த்துவது மற்றும் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ளன. இவற்றுக்கு போதிய காணிகள் தேவைப்படும் போது அவற்றை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்டவர்களை நாம் நாடுவோம்.

தென் அதிவேக வீதி, மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகையில், அப்பிரதேச மக்களின் காணிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன. அப்போது பொதுமக்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
ஆனால், வடக்கில் அரசியல் கட்சிகள் போலியான பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டு பொது மக்களை ஏமாற்றி வருகின்றன.

இராணுவம் ஒருபோதும் வடக்கில் பொது மக்களின் காணிகளை சுவீகரிக்கவில்லை. குற்றச்சாட்டுகள் அனைத்துமே உள் நோக்கங்களைக் கொண்டவை என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment