Friday, May 3, 2013

ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையானது அரசியல் நோக்கங்களை கொண்டதாகும்: ஜீ.எல். பீரிஸ்!

Friday, May 03, 2013
இலங்கை::ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையானது அரசியல் நோக்கங்களை கொண்டதாகும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழு கூட்டத்தின் முடிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழு கூட்டத்தில் இலங்கையின் சார்பில் அமைச்சர் பீரிஸ் மற்றும் தாய்லாந்தின் சார்பில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்தின் பிரதி பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் சுரபொங் டொவிசக்சய்குல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் ஒருமைப்பாட்டையும் இறைமையயும் பாதுகாப்பதற்கு முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவி செய்த தாய்லாந்து நாட்டுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்றும் இந்த கூட்டத்தின்போது அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக தாய்லாந்து வாக்களித்தது என்றும் அமைச்சர் பீரிஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூட்டு ஆணைக்குழு கூட்டத்தின்போது பொருளாதார மற்றும் வர்த்தகத்துறை ஆகியவற்றில் முன்னேற்றங்களை அடைவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.

இதேவேளை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழு கூட்டமானது தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை பலப்படுத்தியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

No comments:

Post a Comment