Monday, April 29, 2013

பல்லாண்டு காலம் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் சிங்கள மக்களிடையே விஷமிகளே குரோதத்தை ஏற்படுத்தினர்: அமைச்சர் விமல் வீரவன்ச!


Monday, April 29, 2013
இலங்கை::இந்த நாட்டில் வாழும் சிங்கள தமிழ் மக்களது கலை, கலாச்சார தொடர்புகள் பல்லாண்டு காலமாகவே இருந்து வருகின்றன என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
 
 சனிக்கிழமை பம்பலப்பிட்டி அரச தொடர்மாடி வீடமைப்புத் திட்;டத்தில வாழும் தமிழ் குடியிருப்பாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரைப் புத்தாண்டின் நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
ஹிந்து மக்களது வழிபாட்டு தெய்வ விக்கிரகங்கள் பௌத்த விகாரைகளிலும் இருக்கின்றன. பௌத்த மக்கள் அந்த தெய்வ விக்கிரகங்களையும் வழிபடுகின்றனர். அந் தெய்வங்களை ஆத்மபூர்வமாக அவர்கள் நம்புகின்றனர்.
அதேபோன்றுதான் ஹிந்து மக்களும் பௌத்த விகாரைக்கும் செல்கின்றனர். அதேபோன்று தான் தமிழ் சிங்கள புதுவருடத்திலும் ஒற்றுமை உண்டு.
ஒரு தினத்தில் சூரியா மீன இராசியில் இருந்து மேச இராசி வரையிலான காலப் பகுதியிலேயே இதனைக் கொண்டாடுகின்றோம்
பல்லாண்டு காலமாக தமிழ் சிங்கள மக்களும்  சகோதரத்துவமாக ஒற்றுமையாக வாழ்ந்தாலும் கடந்த காலங்களில் சில இன விஷமிகளால் இனங்களுக்கிடையே குரோதத்தை வளர்த்தனர்.
இருந்தாலும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள தொடர்மாடி வீடுகளில் மூவீனத்தவர்களும் மிகவும் ஜக்கியமாகவும் சகோதரத்துவ முடையவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
 
இவ்வாறான நிகழ்வுகளை வருடா வருடம்  நடைமுறைப்படுத்துமாறு எனது அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
அடுத்த வருடம் அரச செலவில் கொழும்பில் உள்ள சகல வீடமைப்புத் திட்டங்களில் வாழும் சகல இனத்தையும் பிரநிதித்துவப்டுத்தி அவர்களது கலை கலாச்சார விழுமியங்களை பிரதிபலிக்கும் தமிழ் சிங்கள முஸ்லீம் நிகழ்வுகளை நடாத்த வேண்டும்.
 
இதற்கான அனுசரனையை சம்பந்தப்பட்ட அதிகார சபையின் ஊடாக நடைமுறைப்படுத்தல் வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முகம்மத் முசம்மில், ஐனாதிபதியின் இணைப்பாளர் இராகுலன், கூட்டாதன முகாமைத்துவ அதிகார சபை தலைவர் சட்டத்தரணி கபில கமகே, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் பிரிகேடியர் மஹிந்த முதலிகே உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
கோலம்போடுதல், பரதநாட்டியம், பூமாலைகோர்த்தல், கிடுகு பின்னுதல், திருக்குரல் மனப்பாடம், விபுலாநந்தர் அடிகள் வேடம், கையிறு இழுத்தல், தமிழ் இசை,நிகழ்ச்சிகளும்  முழு நாள் நிகழ்வாக இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள வீடமைப்புத் திட்டங்களை பராமரிக்கும் கூட்டாதான முகாமைத்துவ அதிகார சபை அனுசரணை வழங்கியது.

No comments:

Post a Comment