Monday, April 29, 2013

தமிழக மீனவர் கைது பிரச்னையில் இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்: திமுக தலைவர் (23ம் புலிகேசி) கருணாநிதி!

Monday, April 29, 2013
சென்னை::தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்களை தடுக்க, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கையாண்ட தீவிர நடவடிக்கையை தற்போதும் இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்தி வரும் தாக்குதல் குறித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி, இந்தப் பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஏன், தமிழக அரசும் கூட, தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்ற போதெல்லாம் உடனடியாக பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

நமது வலியுறுத்துதலைத் தொடர்ந்து இந்திய அரசும் இலங்கை அரசுக்கு முறையீடு செய்துவிட்டு, அதுபற்றி நாடாளுமன்றத்திலேயோ அல்லது அறிக்கை மூலமாகவோ தங்கள் கடமை முடிந்து விட்டதைப் போல விளக்கம் அளிக்கின்றனர். ஆனால் இதனால் எல்லாம் பிரச்னைகள் முடிந்து விட்டனவா என்றால் இல்லை என்றே வேதனையோடு சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். உதாரணமாக நேற்று முன்தினம், நமக்கு வந்துள்ள செய்திப்படி, இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர், எப்படியும் இந்த முறை விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்த நேரத்தில், மூன்றாவது முறையாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் மே 6 வரை இவர்களுக்கு காவல் நீட்டிப்பு  செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்த 30 மீனவர்கள் ஏப்ரல் 6ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் மூன்று முறை ஆஜர் செய்யப்பட்டு மே 6ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளனர். செய்தியை அறிந்த, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சாலை மறியல் செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் மாத்திரமல்ல; ஏப்ரல் 5ம் தேதி கடலில் மீன்பிடித்தபோது, புதுவை , காரைக்காலைச் சேர்ந்த 26 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, ஊர்க்காவல் துறை நீதிமன்றத்திலே ஆஜர்படுத்தி,  அவர்களையும் சிறையிலே அடைத்தனர். நீதிமன்றம் அவர்களை மே 29ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தர விட்டுள்ளது.

எனவே தமிழக மீனவர்களின் அவலம் தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் மத்திய அரசிடம் இந்தப் பிரச்னைக்காக வேண்டுகோள் விடுப்பதும் தொடர்கதையாக உள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் மீனவர்களின் இந்தத் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இனியும் காலதாமதம் செய்யாமல் விரைந்து தீவிரமான ஒரு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இத்தாலி கடற்படையினரால் கேரள மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வில் மத்திய அரசு செலுத்திய அக்கறையில் நூற்றில் ஒரு பங்காவது தமிழக மீனவர்களுக்கும் செலுத்திட வேண்டும் என்று தமிழகமே எதிர்பார்க்கிறது.

மேலும் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, சிங்களக் கேப்டன் ஒருவர், அடிக்கடி தமிழக மீனவர்களை, தமிழக எல்லைப் பகுதிக்குள்ளேயே வந்து தாக்கி வருவதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்த பிரதமர் இந்திரா காந்தி, அந்தக் கேப்டனைக் கைது செய்ய நமது கடற்படைக்கு உத்தரவிட்டார். நமது கடற்படை வீரர்களும் சிங்களக் கேப்டனைப் பிடித்து வந்து, மண்டபத்தில் சிறை வைத்தனர்.

அதன் பிறகு அந்தக் கேப்டனையும், சக இலங்கை வீரர்களையும் மன்னிப்பு கேட்க வைத்து, இலங்கை அரசு திரும்பப் பெற்றது. இந்தச் சம்பவத்தை இந்திய அரசு நினைவிலே கொண்டு, இந்திரா காந்தி அம்மையார் எடுத்த நடவடிக்கையைப் போல தீவிரமான நடவடிக்கை தற்போதும் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் நமது மீனவர்களின் விருப்பமாகும்.  மத்திய அரசு மேலும் இதிலே தயக்கம் காட்டுமேயானால், தமிழகத்தின் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே அது தெளிவாக்குவதாக அமைந்து விடும் என்பதை மத்திய அரசு மறந்து விடக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment