Monday, April 29, 2013

முஸ்லிம்களால் வஞ்சிக்கப்படும் கல்முனைத் தமிழரை பாதுகாக்க பொதுபல சேனாவுடன் கைகோர்ப்போம்: அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப்பிரசுரம்!

Monday, April 29, 2013
இலங்கை::பொது பல சேனாவை ஆதரிப்பதன் மூலமே அம்பாறை மாவட்ட தமிழர்கள் தங்களின் இருப்பை தக்கவைக்க முடியும் எனக் குறிப்பிடும் துண்டுப்பிரசுரம் ஒன்று நேற்று அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட நமக்காக நாம்’ எனும் அமைப்பின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இத் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
கல்முனையில் தமிழர்களுக்காக இருக்கின்ற ஆதார வைத்தியசாலை, கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் போன்றவற்றை திட்டமிட்டு சதி செய்து அஷ்ரப் வைத்தியசாலையுடனும் முஸ்லிம் பிரிவு பிரதேச செயலகத்துடனும் இணைப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் இஸ்லாமிய கல்விமான்கள் எடுத்துவரும் நடவடிக்கையானது உண்மையிலேயே எமக்கு வேதனையைத் தருகிறது.
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போன்ற நடவடிக்கையே இதுவாகும். எமக்காக இருக்கும் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் தினம் தினம் இஸ்லாமிய சகோதரர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றனர்.
 
நாங்களும் இதனையே ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் அவர்களோ எம்மை அடக்கி இருக்கின்ற அற்ப சொற்ப சலுகைகளையும் கிடைக்கவிடாமல் செய்ய முனைப்பாக இருக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்பு விடயத்தில் நாம் எமது அரசியல் தலைமைகளையோ புத்திஜீவிகளையோ நம்பத்தயாரில்லை.இருக்கின்ற இடங்களையாவது காப்பாற்றிக் கொள்ளவும் எமது மதங்களை அழிய விடாமல் பாதுகாக்கவும் ஏதோ ஒரு முடிவுக்கு வர வேண்டியவர்களாக உள்ளோம்.
எனவே இதற்காக இன்றைய நிலையில் பலம்மிக்க பொது பல சேனாவை ஆதரிப்போம்.
 
சிங்கள மக்களுக்கும் எமக்கும் நிறையவே ஒற்றுமை உண்டு. அவர்களுக்கும் எமக்கும் யுத்த காலத்தில் இருந்த மனக்கசப்பை விட வேறு எந்த முரண்பாடும் இல்லை. கலாசாரத்திலும் வணக்க முறைகளாலும் ஒற்றுமையாக இருக்கின்ற நாம் பொது பல சேனாவுடன் இணைந்து எமது பிரதேசத்தில் எஞ்சியுள்ளவற்றையாவது காப்பாற்றுவோம்” என இத்துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கல்முனை பிரதேசத்தில் பொதுபல சேனாவின் கிளைக் காரியாலயம் ஒன்றை திறக்குமாறு அப்பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் அவ்வமைப்பின் தலைமையகத்துக்குச் சென்று வேண்டுகோள் விடுத்திருந்ததாக பொதுபல சேனாவின் பேச்சாளர் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்

No comments:

Post a Comment