Monday, April 29, 2013

யார் வழக்குத் தொடர்ந்தாலும் எதிர்கொள்ள தயார்: பொதுபல சேனா சவால்!

Monday, April 29, 2013
இலங்கை::பொதுபல சேனாவுக்கு எதிராக எவரும் எத்தனை வழக்குகளையும் தாக்கல் செய்யலாம். அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்றதிகாரி டாக்டர் டிலந்த விதானகே தெரிவித்தார்.
பொதுபலசேனாவுக்கு எதிராக அஸாத் சாலி வழக்குத் தொடரவுள்ளதாக தெரிவித்துள்ள கூற்று தொடர்பாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டுச் சட்டத்தின்படி எவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அது அடிப்படை உரிமை. இதற்குத் தடை போட எம்மால் முடியாது. முஸ்லிம் மக்களுக்குக்கெதிராக எமது அமைப்பு செயற்படவில்லை. அடிப்படை வாதத்தையே எதிர்க்கின்றோம். அதற்கு இடமளிக்க முடியாது.
தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றனர். பொதுபலசேனாவை வைத்து அவர்கள் பிழைப்பு நடத்துகின்றனர். முஸ்லிம்கள் இது குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
முஸ்லிம்களின் உரிமைகள் மீறும் வகையிலும் முஸ்லிம்கள் தொடர்பில் இட்டுக்கட்டப்பட்ட தகவல்களை வெளியிடுவது தொடர்பிலும் பொது பலசேனாவுக்கு எதிராக ஆறு வழக்குகளை தாக்கல் செய்யப் போவதாக முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதிமேயர் அஸாத் சாலி தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment