Tuesday, April 30, 2013

வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் கர்நாடகா தேர்தல் பிரசாரம் உச்சகட்டம் தேர்தல் பாதுகாப்பு பணியில் 56 ஆயிரம் போலீசார் மாநில எல்லை சோதனை சாவடிகளில் ரகசிய கேமரா!

Tuesday, April 30, 2013
பெங்களூர்::கர்நாடகாவில் பாஜ, காங். தலைவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாட்களே  உள்ளதால், சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  கர்நாடக சட்டசபை தேர்தல் ஒரேகட்டமாக மே 5ம்  தேதி நடக்கிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்நிலையில், ஆளுங்கட்சியான பாஜ, காங்கிரஸ், மஜத,  எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி மற்றும் பிஎஸ்ஆர் காங்கிரஸ் (ஸ்ரீராமுலு) ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளன.
கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கர்நாடக தேர்தல்  பிரசார கூட்டங்களில் பங்கேற்று கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர். பாரதிய ஜனதா ஆட்சியில் கர்நாடகா  வளர்ச்சியில் பின்தங்கி விட்டதாக பிரதமர் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசினார். தேர்தல் தேதி நெருங்குவதால், தலைவர்களின்  பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முழுமூச்சுடன் பாஜ தலைவர்களும் ஆதரவு திரட்டி வருகின்றனர். பாஜ  தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மாசுவராஜ் மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி  ஆகியோரும் பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றனர்.

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பெங்களூர் உள்ளிட்ட முக்கிய  தொகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். பாஜ தலைவர் ராஜ்நாத் சிங் ஷிமோகாவிலும்,  முன்னாள் தலைவர் நிதின்கட்கரி பெல்காமிலும், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் சித்ததுர்கா, தும்கூரிலும், வெங்கைய நாயுடு  பெல்லாரியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார் வடகனராவிலும், முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா கோலார்  மற்றும் சிக்மகளூரிலும், மாநிலத் தலைவர் பிரகலாத் ஜோஷி ஹாவேரியிலும் இன்று பிரசாரம் செய்கின்றனர்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் பரமேஸ்வரா பெங்களூரிலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மைசூரிலும்  வாக்கு சேகரிக்கிறார்கள். சித்த துர்கா மாவட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களுக்காக முன்னாள் பிரதமர்  தேவகவுடா இன்று பிரசாரம் செய்கிறார். மைசூர் மற்றும் சாம்ராஜ் நகரில் எடியூரப்பா வாக்கு சேகரிக்கிறார். பிஎஸ்ஆர்  காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமுலு மைசூரில் பிரசாரம் செய்கிறார்.

பாதுகாப்பு பணியில் 56 ஆயிரம் போலீசார்

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளிலும் 52ஆயிரத்து 410 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வாக்குப்  பதிவுக்கு 65 ஆயிரம் மின்னணு வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. வாக்குப் பதிவு உள்ளிட்ட தேர்தல் பணியில் 2  லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். உள்ளூர் போலீஸ், துணை ராணுவம் மற்றும் ஊர்க்காவல் படை என 56  ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் முக்கிய சாலை சந்திப்புகள் என 2317 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில  எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் ரகசிய கேமரா வைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல்  தொடர்பாக 1304 புகார்கள் வந்துள்ளன. இதில் 438 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் மற்றும்  போலீசார் நடத்திய சோதனையில் இதுவரை ரொக்கமாக மட்டும் ரூ.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர  வாக்காளர்களுக்கு பரிசாக கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.11 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் உள்ளிட்ட  பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

No comments:

Post a Comment