Friday, March 22, 2013
இலங்கை::என்னை பயன்படுத்தி, இந்தியாவில் ஆட்சியை கவிழ்க்க முயல்கிறார்கள்: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பரபரப்பு தகவல்!
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வாக்களித்தது. இந்த நிலையில் இலங்கை சுதந்திர கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் செயற்திட்டத்தில் அதிபர் மகிந்த ராஜபக்சே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பேய்க்கு பயமென்றால் மயானத்தில் வீடுகள் அமைப்பதில்லை. எங்களுக்கு மிகவும் நெருக்கமான இந்தியா இன்று நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. என்னை பயன்படுத்தி இந்தியாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கின்றனர். இது குறித்து நாம் ஒரு போதும் அச்சமடைய தேவையில்லை.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு ஒருபோதும் குறையப் போவதில்லை. இலங்கை சுதந்திரக் கட்சி பயங்கரவாதத்தை இல்லாமல் ஒழித்தது. பிளவடைந்திருந்த நாட்டை ஒரே தேசமாக மாற்றியுள்ளோம். பொய்களுக்கும் வதந்திகளுக்கும் பெரிய அளவில் சக்தி காணப்படுகின்றது. எனினும் இதனை வெற்றி கொள்ள கட்சி என்ற ரீதியில் எங்களால் முடியும்.
கட்சியை பாதுகாக்கும் தார்மீக பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. கட்சியின் செயலாளர் உள்ளிட்ட 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகிச் செல்ல உள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன. எனினும் இது குறித்து அவர்களிடம் கேட்ட போது அவ்வாறான திட்டம் கிடையாது என தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment