Sunday, March 31, 2013

நகத்தினால் கிள்ளி எறிய வேண்டியதை கோடாரியினால் கொத்த வேண்டிய நிலைமை; பௌத்த விகாரையில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு!

Sunday, March 31, 2013
இலங்கை::நகத்தினால் கிள்ளி எறிய வேண்டியதை கோடாரியினால் கொத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு ஒரு குழுவினர் குரோதத்தையும், வெறுப்பையும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று  பிற்பகல் கண்டி ஜம்புகஸ்பிட்டியவில் மூனமலை போதிருக்காராமை விகாரையில் நடைபெற்ற அறநெறிப் பாடசாலை (தஹம்பாசல்) நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.

அமரபுர நிகாயே சத்தம்மோதய சங்க சபாவே அனுநாயக்கர் சாஸ்திரபதி தொடங்கொட தம்ம ரத்தின தேரர், மூனமலை போதிருக்காராம விகாராதிபதி கம்பளை ஜினாலங்கார தேரர் ஆகியோரும் அங்கு உரையாற்றினர்.

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும்போது மேலும் தெரிவித்தவையாவன,

இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த உதவும் பிரதானமான இடம்தான் தஹம்பாசல் எனப்படும் அறநெறிப் பாடசாலைகள்.

தற்போது சமயங்களுக்கும் இனங்களுக்கும் இடையில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் ஒரு சாரார் வெளிக்கிளம்பியுள்ளனர். இதன் பின்னணியில் பார்க்கும் பொது சில வருடங்களுக்கு முன்னர் நாடு அழிவை நோக்கிச் சென்றதை அநேகர் மறந்நு விட்டார்கள் போல தெரிகிறது.

எல்லாச் சமயத்தினரும் தமது சமயக் கலாசராங்களைப் பின்பற்றி ஒழுகுவதற்கான வகதிகளையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். புதிய இனவாதக் குழுக்களின் தோற்றத்தோடு இந்த நாட்டை அழிவிற்கு இட்டுச் செல்லும் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் பெப்பிலியான என்ற இடத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலையை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து இரவு முழுவதும் நாடெங்கிலுமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமே இருந்தன.

வைராக்கியத்தோடும் வெறுப்போடும் வெறியோடும் இத்தகைய கீழ்த்தரமான காரியங்கசை; செய்கின்றனர். நான் சிறுபான்மைச் சமுகம் ஒன்றைச் சேர்ந்தவனாக இருந்தாலும் கூட, இவ்வாறான பௌத்த அறநெறிப் பாடசாலை நிகழ்வுக்கு என்னை அழைத்து கௌரவப் படுத்துகின்றீர்கள். சென்ற முறையும் என்னை இதற்கு அழைத்திருந்தீர்கள் இவ்வாறான சூழ்நிலையில் தான் எங்களுக்கு எதிரான முயற்சிகளும் இன்னொரு சாராரால் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்று அதிகாலையிலேயே நான் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தேன். இவ்வாறான துர்ப்பாக்கிய நிகழ்வுகள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் வியாபித்து விடாமல் தடுக்க வேண்டுமானால் அமைச்சரவையை அவசரமாகக் கூட்டி ஆராயுமாறு அமைச்சர் அவையின் உறுப்பினர் என்ற முறையில் நான் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

நகத்தினால் கிள்ளி எறிய வேண்டியதை இன்று கோடாரியினால் கொத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்து அறிக்கை விடுமாறு பணித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் என்னிடம் தெரிவித்தார்.

இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதானத்தை அனுபவிப்பதற்கு அதாவது யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதியைக் குழைப்பதற்கு தீய சக்திகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. நாட்டை மீண்டும் நாசத்திற்கு இட்டுச் செல்வதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு குரோதத்தையும் வெறுப்பையும் வளர்ப்பவர்கள் நாட்டுக்கே சாபக்கேடாகும்.

அவ்வாறான சக்திகளுக்கு தங்களது அனுமதியோ, ஆசீர்வாவதமோ இல்லையென மதிப்பிற்குரிய மகா நாயக்க தேர்களும் கூறி வருகின்றனர்.

இது பல்லின மக்கள் வாழும் நாடு என எனக்கு முன்னர் உரையாற்றிய நாயக்க தேரர் குறிப்பிட்டார். அத்துடன், வேறுபட்ட சமயங்களை பின்பற்றும் இந்நாட்டு பெற்றோரும், தாய்மாரும், பிள்ளைகளும் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் ஒற்றுமைப்பட்டு இந்ந நாட்டைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். அவரது கூற்று என்னை வெகுவாகக் கவர்ந்தது.

இவ்வாறான பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கு எதிர்காலத்திலும் உரிய ஒத்துழைப்பை வழங்குவோம் எனக்கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்” என்றார்.

No comments:

Post a Comment