சென்னை::எந்தவொரு நாட்டினது உள்ளக நெருக்கடிக்கும் அந்த நாட்டினுள்ளேயே வசிக்கும் பொதுமக்களாலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் த வீக் சஞ்சிகையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போதே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாட்டினது தேவைக்கு ஏற்ற வகையில் மாத்திரம் உள்நாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு வெளிதரப்பினர் ஒத்துழைப்பை வழங்க முடியும் என்றும் பிரசாத் காரியவசம் சுட்டிக்காட்டினார்..
இதன்போது, ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையில் இந்தியா செயற்பட்ட விதத்தால் இந்திய - இலங்கை உறவுகளில் பாதிப்பு ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்ட கால நட்புறவுக்கு இதனூடாக அச்சுறுத்தல் ஏற்படாது என்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் சுட்டிக்காட்டினார்.
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரேரணையை கொண்டு வர முனைந்தவர்கள், யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்களை நோக்கத் தவறியுள்ளனர்.
தமிழ் நாட்டில் எதிர்ப்பை வெளியிட்டு வரும் அரசியல் தலைவர்களும் இலங்கையில் நிலவும் உண்மையான நிலைமைகளை ஆராய முட்படவில்லை.
கடந்த காலங்களில் மத்திய அரசாங்கத்தின் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராயந்தனர்
ஆனால் தமிழ் நாட்டின் எந்தவொரு அரசியல் பிரமுகர்களும் இலங்கைக்கு விஜயம் செய்ய வில்லை.
இதனால் இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம்சுமத்துவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்தியாவின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து அவரிடம் வினவப்பட்டது.
இந்திய அரசியல் தரப்பினரின் நடவடிக்கை மற்றும் உள்ளக அரசியல் பற்றி தமக்கு கருத்து வெளியிட வேண்டிய தேவைப்பாடு இல்லை என்றும், அதனை இந்தியாவே தீர்த்துக் கொள்ளும் என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சென்னையில் வைத்து பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரம் நகர மத்தியில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தி பௌத்த பிக்குகளும், வேறு சில மத தலைவர்களும் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்...

No comments:
Post a Comment