Thursday, March 21, 2013

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி: தீர்மானத்துக்கு 25 நாடுகள் ஆதரவு : 13 நாடுகள் எதிர்ப்பு - இந்தியா ஆதரவு அளித்தது!

Thursday, March 21, 2013
ஜெனீவா::இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் விவாதத்துடன் தொடங்கிய வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு இந்தியா உட்பட ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்தது. தீர்மானத்துக்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்தது. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகள் புறக்கணித்தனர். இந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான் வாக்களித்தது.

திருத்தம் கொண்டு வராத இந்தியா

ஐ.நா. கவுன்சிலில் அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா எந்த திருத்தமும் கொண்டு வரவில்லை. இதனையடுத்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா திருத்தமின்றி ஆதரித்தது.

இந்தியா வலியுறுத்தல்

இலங்கை நிகழ்வுகள் பற்றி சுயேச்சையான நம்பகத்தனமான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் தமிழருக்கு அரசியல் உரிமை தர ஆக்கபூர்வ நடவடிக்கை இலங்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து பேசிய இந்தியா இலங்கை சம்பவங்கள் குறித்து இந்தியா பொருட்படுத்தாமல் இருக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்மானம் நிறைவேறிய பின் இலங்கையின் கருத்து

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றிகரமாக ஐ.நா.வில் நிறைவேறிய பிறகு, இலங்கை பிரதிநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்க தீர்மானத்தில் உள்ள புகார்கள் பொய்யானவை என்று கூறினார். இந்த தீர்மானத்தில் இலங்கை மேற்கொண்ட மறுவாழ்வுப் பணிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை அரசு எந்த மக்களுக்கு எதிராகவும் பாரபட்சம் காட்டியதில்லை என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவரின் அறிக்கை உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்று கூறினார்.

சர்வதேச விசாரணை கூடாது

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தக் கூடாது என இலங்கை பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார். தனிமைப்படுத்தப்படும் இலங்கை மீது அதீத கவனம் செலுத்தப்படுவதாக கூறிய அவர், பல நாடுகளில் மனித உரிமை மீறல் நடக்கும் போது இலங்கை மட்டும் குறி வைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். முன்னேறி வரும் இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் ஆதரவு தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

தீர்மானத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு

விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி இந்த தீர்மானம் ஏற்க முடியாது என்று கூறினார். சர்வேதச பரிந்துரைகள் இந்த தீர்மானத்தில் இதில் இல்லை என்றும், இலங்கைக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார். இதனால் தீர்மானத்தை நிராகரிக்கிறோம் என்று அவர் கூறினார்....

இந்த தீர்மானத்தைப் பற்றியும், அந்தந்த நாடுகளின் கருத்துக்கள் பற்றியும், த‌ற்போது ஐ.நா. சபையில் பேச்சு நடந்து வருகிறது. அமெரிக்க தீர்மானம் குறித்தும், இவ்விவகாரத்தில் இந்தியாவின் நிலை குறித்தும் பேசிய இந்தியாவுக்கான தூதர் திலிப் சின்ஹா, இந்தியா அண்டை நாடான இலங்கையின் உறவை துண்டிக்க முடியாது என்று கூறினார்.


இலங்கையில் இறுதிகட்ட போர் முடிந்திருக்கும் நிலையில், இந்த நேரத்தை அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்க நல்ல தருணமாக இந்தியா பார்ப்பதாக கூறினார். மேலும் இலங்கை உறுதியளித்த படி வடக்கு மாகாண தேர்தலை இலங்கை நடத்த வேண்டும். அதே போல் 13வது சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியது.

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இ‌ந்‌தியா உ‌ட்பட 25 நாடுகள் ஆதரவாகவும், 13 நாடுகள் எதிராகவு‌ம் வாக்களித்தன. இவ்வாக்கெடுப்பில் ஜ‌ப்பா‌ன் உ‌ள்‌ளி‌ட்ட 8 நாடுகள் புற‌க்க‌ணி‌த்தன.

No comments:

Post a Comment