Thursday, January 10, 2013
சென்னை::தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. புதிதாக விண்ணப்பித்தோருக்கு வரும் 25ம் தேதி அடையாள அட்டை வழங்கப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக 22 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, 2013ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு நடந்து முடிந்தது. அதன்பின், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில், புதிதாக பெயர் சேர்க்க 23 லட்சத்து 37,934 பேர், பெயர் நீக்க 2 லட்சத்து 38,617 பேர், திருத்தம் செய்ய 2 லட்சத்து 66,225 பேர், பெயர் முகவரி இடம் மாற்ற ஒரு லட்சத்து 12,596 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து படிவங்களின் விவரமும் கணினியில் பதிவு செய்யப்பட்டன. அதை தொடர்ந்து, விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்களை வைத்து வீடு, வீடாக சென்று கள விசாரணையை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டனர். மொத்தம் 60,000 அரசு ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கள விசாரணையின் போது விவரங்கள் தவறானவை என சிலருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர், புதிதாக சேர்க் கப்பட்ட வாக்காளர்கள் பெயர் பட்டியலை வெளியிட உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
சென்னையில் ரிப்பன் மாளிகையில் ஆணையர் விக்ரம் கபூர், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டபேரவை தொகுதிக் கான பட்டியலை வெளியிட்டார். அதில் சென்னை யில் 34,20,098 வாக்கா ளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 17,09,432, பெண்கள் 17,10,119, இதர வாக்காளர்கள் 547 பேர் அடங்குவர். இந்த பட்டியலை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அமைவிடங்கள், அந்தந்த மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். புதிதாக விண்ணப்பித்தோருக்கு வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் தினமான வரும் 25ம் தேதி வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 5.15 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
புதிதாக சுமார் 22 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் தினமான வரும் 25ம் தேதி அடையாள அட்டை வழங்கப்படும். அன்றைய தினம் சென்னை கிண்டி ராஜ்பவனில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியை கவர்னர் ரோசய்யா தொடங்கி வைக்கிறார். மேலும், மாநிலம் முழுவதும் மொத்தம் 29 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்தந்த பகுதிகளில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள். புதிய வாக்காளர் அடையாள அட்டையை வாக்குச் சாவடி அமைவிடங்கள், அந்தந்த மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

No comments:
Post a Comment