Wednesday, January 30, 2013

மினுவங்கொடையில் கொள்ளை: பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

Wednesday, January 30, 2013
இலங்கை::மினுவங்கொடையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

மினுவங்கொடை - திவுலபிட்டிய வீதிக்கு அருகில் இளைஞர் ஒருவரின் தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட வந்தவர்களுள் ஒருவரே பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் வருகை தந்த நான்கு கொள்ளையர்கள் குறித்த இளைஞரின் தங்கச்சங்கிலியை பறித்துச்செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது கொள்ளையர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் வருகை தந்ததையடுத்து கொள்ளையர்களில் ஒருவரினால் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட பதில் துப்பாக்கி பிரயோகத்தின்போதே ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் குறித்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த நபரிடமிருந்து T-56 ரக துப்பாக்கியொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

உயிரிழந்த சந்தேகநபரின் சடலம் மினுவங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment