இலங்கை::சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கு மரண தண்டனையே சிறந்ததாகும் என சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர்
தெரிவித்தார்.மரண தண்டனை நடைமுறையிலில்லாதவிடத்து அதிகபட்ச கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுவதுடன் பொதுமன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடமளிக்கக்கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிரான தேசிய தின நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சிறுவர்களுக்குத் தேவையானதை வழங்காது தேவையற்றதை பெற்றோர்கள் பெற்றுக்கொடுப்பதே தவறான வழிக்கு அவர்கள் செல்ல வழிவகுக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிரான தேசிய தின நிகழ்வுகள் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றன. வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியிலிருந்து பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் : பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு அன்பின் நிமித்தம் அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கின்றனர். அவர்களுக்கு அவை பொருத்தமானதா, அத்தியாவசியமானதா என்பதைப் பற்றிச் சிந்திப்பதில்லை.
அவர்களின் தேவைகளை யும் பிள்ளைகள் மீது திணிக்கின்றனர். குறிப்பாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அவர்களுக்கு விருப்பமான ஒரு நிகழ்ச்சியை பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு பார்த்து ரசிக்கின்றனர்.
அந்த நிகழ்ச்சி பிள்ளைகளுக்குப் பொருத்தமானதா? என்பது பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. கைத்தொலைபேசிகள், இன்டர்நெட் பாவனைகள் என பிள்ளைகள் வழி தவறுவதற்குத் தேவையானவற்றை வகுத்துக் கொடுப்பதில் பெற்றோரே முன்நிற்கின்றனர்.
பிள்ளைகளை மேலதிக டியூசன் வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், அவர்கள் டியூசனுக்குப் போகின்றார்களா மற்றும் அவர்களின் செயற்பாடுகள் பற்றி கவனத்திற் கொள்வதில்லை. இத்தகைய செயல்களே 60 வீதமான பிள்ளைகள் சீரழியக் காரணமாகிறது.
இந்து, பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் என மதங்களனைத்தும் நல்வழிகளையே போதிக்கின்றன.எனினும் இத்தகைய துஷ்பிரயோகங்கள் ஏன் நடைபெறுகின்றன என்பது பற்றி நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது.
கல்வி கற்காதோர் மட்டுமன்றி கற்றோரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சிலவேளை இது தொடர்பில் செயற்படும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் இத்தகைய சீரழிவுகளைத் தடுக்க முடியும்.
ஊடகங்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் நபர்களின் பெயர், ஊர் போன்ற விவரங்களை வெளியிட வேண்டாம்.
இவை பிரசுரங்களாக வெளிவரும்போது அல்லது தொலைக்காட்சிகளில் காட்டப்படும் போது சம்பந்தப்பட்டவர்கள் மேலும் அவமானத்திற்குள்ளாகின்றார்கள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a Comment