Tuesday, January 15, 2013

நாட்டின் சட்டங்களை அலட்சியம் செய்து அரசியல் இலாபம் தேட முனையும் குழுக்களை இனங்காண்பது நாட்டை நேசிக்கும் சகலரதும் பொறுப்பாகும் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, January 15, 2013
இலங்கை::காகிதத் துண்டொன்றில் நாட்டை ஆட்சி செய்த யுகம் மீள இந்த நாட்டில் உருவாக இனியும் எவருக்கும் இட மளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரி வித்துள்ளார்.

நாட்டின் சட்டங்களை அலட்சியம் செய்து அரசியல் இலாபம் தேட முனையும் குழுக்களை இனங்காண்பது நாட்டை நேசிக்கும் சகலரதும் பொறுப்பாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சட்டத்தரணிகள் மத்தியில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜயதாச ராஜபக்ஷ உட்பட இலங்கை நீதி துறையின் 14 சட்டத்தரணிகள் சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.   நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இவர்கள் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி துண்டுக் கடிதமொன்றின் மூலம் நாட்டை ஆட்சி செய்த யுகம் மீண்டும் உருவாக இட மளிக்க முடியாது எனத் தெரிவித்துள் ளார்.

இங்கு கருத்து வெளியிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகாரிகள்; சில குழுக்கள் தமது சங்கத்தில் ஊடுருவி அரசியல் இலாபம் தேட முனைவதாகத் தெரிவித்துள்ளனர்.   கடந்த காலங்களில் சட்டத்துறையில் இடம்பெற்ற விவகாரங்களுக்கும் தமது சங்கத்திற்கும் எத்தகைய சம்பந்தமுமில்லை யென சட்டத்தரணிகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிகழ்வில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், மஹிந்தானந்த அலுத்கமகே, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment