Wednesday, January 09, 2013
இலங்கை::நாட்டின் இறைமையைப் பாதுகாத்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் போது எந்த அழுத்தங்களுக்கும் இடமளிக்கக் கூடாது. மக்கள் ஆணையையும் அவர்களுக்கான உரிமையையும் எவரும் காட்டிக்கொடுக்க இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மக்கள் எதிர்பார்ப்பையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியமென தெரிவித்த ஜனாதிபதி எமக்காக மக்கள் என்றில்லாமல் மக்களுக்காக நாம் என செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நாட்டுக்கான பாரிய பொறுப்புக்களை ஏற்று முக்கியமான தீர்மானங்களை கடந்த காலங்களில் தாம் மேற்கொண்டதையும் சுட்டிக்காட்டினார்.
உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சின் தேசிய மாநாடும் உள்ளூராட்சி சபைகளின் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வும் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர்கள் ஏ. எல். எம். அதாவுல்லா, பஷில் ராஜபக்ஷ, பி. தயாரத்ன, எஸ். பி. நாவின்ன உட்பட சகல மாகாண முதல்வர்கள், ஆளுநர்கள் உள்ளூராட்சி சபை முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-
தற்போது உள்ளூராட்சி சபைகள் மக்களுக்குச் சிறந்த சேவையாற்றி வருகின்றன. சில உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் அளப்பரிய சேவை புரிந்து கெளரவத்தையும் விருதுகளையும் பெற்றுக் கொள்கின்றனர். இதேபோன்று ஏனைய உள்ளூராட்சி சபைப் பிரதிநிதிகளும் அர்ப்பணிப்புள்ள சேவை செய்து கெளரவத்துக்கும் விருதுக்கும் தம்மை தகுதியாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.
உள்ளூராட்சி மன்றங்களில் கடந்த 500 வருட காலங்களின் பின் எமது காலத்திலேயே முக்கிய வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. நகரங்களுக்கு மட்டும் என மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தியை நாம் கிராமங்களுக்கு எடுத்துச் சென்று புரட்சி செய்துள்ளோம். சிறந்த வளங்கள் கிராமப்புறங்களிலேயே உள்ளன. அதன் பயனை மக்கள் அனுபவிக்கச்செய்வதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியமாகும்.
நாட்டை மீட்டு ஒன்றிணைக்க நாம் முற்பட்டபோது அதற்கு எதிரான பல தடைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி யிருந்தது. சில சக்திகள் தொடர்ச்சியாக இடையூறுகளை விளைவித்தன. நாட்டை மீட்டு அதனை அபிவிருத்தி செய்ய நாம் மஹிந்த சிந்தனைத் திட்டத்தை முன்வைத்த போது அது மெதமுலன திட்டம் என அலட்சியப்படுத்தினர்.
இதிலிருந்து அவர்கள் கிராமங்களின் முன்னேற்றத்துக்கு எதிரானவர்கள் என்பது புலனாகிறது. நாம் எமது ஆட்சிக் காலத்தில் சகல வரவு செலவுத் திட்டங்களிலும் உள்ளூ ராட்சி சபை பிரதேசங்களை முன்னேற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். இது எமது பொறுப்பும் எமக்கான உரித்துமாகும்.
எப்போதும் ஒரு சிறு குழுக்களுக்கு மட்டும் நகரங்களின் அதி காரங்களை விட்டுவிட முடியாது. கிராமங்களைக் கட்டியெழுப்பும் புரட்சியை நாம் பலமாக முன்னெடுப்போம். பண்டுகாபய அரசனின் ஆட்சிக் காலத்தைப் போன்று கிராம சபை முறையை ஏற்படுத்த நாம் முனைப்புடன் உள்ளோம்.
கடந்த ஆட்சிக் காலங்களில் கிராம சபை முறைகள் இல்லாதொழிக்கப்பட்டன. மக்கள் நிர்வாகத்திலிருந்து கிராமங்கள் தூரமாக்கப்பட்டன. மீள அதை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதே எமது நோக்கம்.
மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்கள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். இதனை நோக்காகக் கொண்டே நாம் உள்ளூராட்சித் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். சிறப்பாக வேலை செய்வதன் மூலமே மக்கள் மனதில் இடம் பிடித்து தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புக்கிட்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 'ஸ்வர்ண புரவர' விருதுகளை வழங்கி கௌரவித்தார்.




No comments:
Post a Comment