Tuesday, December 04, 2012
நாகை::கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை, காரைக் கால் மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதைக்கண்டித்து நாகை அக்கரைப்பேட்டை, காரைக்கால் மீனவர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். நாகை அக்கரைப்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த எழிலரசன்(37) உள்பட 2 பேருக்கு சொந்தமான விசைப்படகுகளில் 16 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மேலும் காரைக்கால் கிளிஞ்சல்மேட்டை மீனவர்கள் 21 பேர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
வேதாரண்யத்திற்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை கடந்து வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 37 பேரையும் நேற்று அதிகாலை கைது செய்து திரிகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கரைக்பேட்டை மீனவர்கள் 3 ஆயிரம் பேர் இன்று காலை மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் இவர்களது 200 விசைப் படகுகள், 200 பைபர் படகுகள், 50 கட்டுமரங்கள் ஆகியவை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் இலங்கை கடற்படையை கண்டித்து காரைக்கால் மீனவர்கள் சுமார் 11,500 பேரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 900 விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment