Wednesday, November 28, 2012

நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அரசாங்கத்தினால் சகித்துக்கொள்ள முடியா நிலை - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க!

Wednesday, November 28, 2012
இலங்கை::தமது விருப்பு வெறுப்புகளின் பிரகாரம் நீதிமன்றம் செயற்பட வேண்டுமென அரசாங்கமொன்று எண்ணுவது ஜனநாயகத்திற்கும் மக்கள் இறைமைக்கும் விடுக்கப்படவுள்ள பாரதூரமான அச்சுறுத்தலுக்கான அறிகுறியாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணை உள்ளிட்ட, கடந்த காலத்தில் இடம்பெற்ற தொடர் சம்பவங்களினால் நீதித்துறைக்கு அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளதாக 'ஜனநாயகம்-அரசாங்கம்-நீதிமன்றம்' என்ற தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையிலுள்ள சகிப்புத்தன்மையற்ற அரசியல் சூழலில் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அரசாங்கத்தினால் சகித்துக்கொள்ள முடியாதநிலை தோன்றியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தொழிலில் இருந்து நீக்கப்படுகின்ற ஊழியர் ஒருவர் தனக்கு நியாயம் பெற்றுக்கொள்வதற்காக நாடக்கூடிய பல்வேறு இடங்கள் காணப்படுகின்றபோதிலும் ஜே.ஆர்.ஜயவர்தன அரசியலமைப்பின் பிரகாரம் உயர்நீதிமன்ற அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நியாயம் கோரி செல்லக்கூடிய இடமொன்று காணப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவரேனும் நீதியரசர் ஒருவருக்கு எதிராக குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதனை பாராளுமன்றத்திற்கு வெளியில் நீதிமன்றக் கட்டமைப்பின் கீழ் விசாரணைக்கு உட்படுத்துவது உகந்தது என்ற யோசனையை 200ஆம் ஆண்டு தாம் திருத்தமாக முன்வைத்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது கடிதத்தில் கூறியுள்ளார்.
பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணையை விசாரிப்பதற்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்படுவதே சிறந்தது என தாம் யோசனை முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment