Thursday, November 29, 2012

தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் அவர்களது தேவைகள் நிறைவு செய்யப்படும் வகையிலும் அரசாங்கம் தீர்வு ஒன்றை வழங்கிய பின்னரே 13 ஆவது திருத்தத்தை ரத்து செய்வது குறித்து தீர்மானிக்கப்படும் - லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன!

Thursday, November 29, 2012
இலங்கை::தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் அவர்களது தேவைகள் நிறைவு செய்யப்படும் வகையிலும் அரசாங்கம் தீர்வு ஒன்றை வழங்கிய பின்னரே 13 ஆவது திருத்தத்தை ரத்து செய்வது குறித்து தீர்மானிக்கப்பட வேண்டுமென பிரதி பொருளாதார அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 13 வது திருத்தத்தினூடாக எதிர்பார்த்த தீர்வு கிடைக்காத போதும் அதனை ஒரேயடியாக ரத்துச் செய்ய முடியாது. முதலில் அதற்கு மாற்றுத் தீர்வொன்று காணப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக வியலாளர் மாநாட்டில் 13 ஆவது திரு த்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இங்கு உரையாற்றிய அவர், 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஆளும் தரப்பில் உள்ள சில கட்சித் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அது அவர்களது கருத்தே அன்றி அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல. 13 ஆவது திருத்தத்தை அகற்றுவதனால் அதற்கு சகல தரப்பினரதும் இணக்கம் பெறப்படவேண்டும். 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லை. அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண கொண்டுவரப்பட்ட13 ஆவது திருத்தத்தை ஒரேயடியாக மாற்ற முடியாது. முதலில் அதற்கு மாற்aடாக வேறு தீர்வு எட்டப்பட வேண்டும். தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் அவர்களது தேவைகள் நிறைவேற்றப்படும் வகையில் அரசாங்கம் தீர்வொன்றை வழங்கிய பின்னரே அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும். 13 ஆவது திருத்தத்தினூடாக தமிழ் மக்களுக்கோ ஏனைய மக்களுக்கோ எதிர்பார்த்த தீர்வுக்கிடைக்கவில்லை. இருந்தாலும் அதனை இரத்து செய்வதற்கு முன்னர் வேறு தீர்வு முன்னெடுக்கப்பட வேண்டும். 13 ஆவது திருத்தத்தை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் பொதுவான முடிவு எதுவும் எட்டவில்லை. இது குறித்து சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெளிவாக குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கட்சிகளினதும் தனிப்பட்ட கருத்துகளே இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பொய்பிரசாரங்கள் செய்து வருகின்றன. இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது. இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு தமிழ் கட்சிகளுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். தெரிவுக்குழுவுக்கு வராமல் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஊடாக தம்மை வளர்த்துக்கொள்வதால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பொறுப்புடன் செயற்படவேண்டும். வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. மீள்குடியேற்ற நடவடிக்கையும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக ஏனைய மாவட்டங்களை விட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் கலந்துகொள்ள முன்வரவேண்டும் என்றார். திவிநெகும சட்டமூலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கும் திவிநெகும தொடர்பான தீர்ப்பிற்கும் எதுவித தொடர்பும் கிடையாது. நீதிமன்ற உத்தரவை மதித்து நாம் திவிநெகும தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பை முழுமையாக அமுல்படுத்தியுள்ளோம். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படியே சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரம் பெறப்பட்டது. திவிநெகும சட்டமூலத்திலுள்ள சில சரத்துகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்து. அதன் படி குறித்த பிரிவுகளை அகற்றி ஏனைய பிரிவுகள் மாத்திரம் அமுல்படுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment