Wednesday, October 31, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார் மஹிந்த சமரசிங்க!

Wednesday, October 31, 2012
ஜெனீவா::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் குழுவினர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகருக்குச் சென்றுள்ளனர்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளைய தினம் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளதாக வெளிவிவகார செயலாளர் கருணாரத்ன அமுணுகம தெரிவித்தார்.
இந்த கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சு, நீதி அமைச்சு, சட்டமா அதிபர்கள் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளைய தினம் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்தவுள்ளார்.
கடந்த 4 வருடங்களில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக சர்வதேச நாடுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த கூட்டத்தொடரில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு பதிலளிப்பதற்கு எதிர்வரும் 5ஆம் திகதி ஏனைய நாடுகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார செயலாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment